பழிதீர்த்த ஆர்சிபி
ஐபிஎல் 2020 தொடரில் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறிய ஆர்சிபி அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி கொண்டு தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்நிலையில் இந்த 2021 தொடரில் வெற்றிக்கான தீவிரத்துடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அந்த தோல்விக்கு நேற்றைய போட்டியில் பழிவாங்கியுள்ளது.
ஆர்சிபி அபார வெற்றி
நேற்றைய ஐபிஎல் 2021 தொடரின் 6வது போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில், 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி கொண்டுள்ளது. முதலில் ஆடிய ஆர்சிபி 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆயினும் அதன் பௌலர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
சாஹா -வார்னர் பார்ட்னர்ஷிப்
எஸ்ஆர்எச் கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் அடித்திருந்தார். மேலும் விரித்திமான் சாஹாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 83 ரன்களை குவித்திருந்தார். அந்த அணியின் பாண்டே 38 ரன்களை அடித்திருந்தார். எல்லாம் சிறப்பாக சென்ற நிலையில் இவர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்தபின்பு போட்டியின் போக்கு மாறியது.
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்
17வது ஓவரில் ஷாபாஸ் அகமது தொடர்ச்சியாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தார். தொடர்ந்து ஹர்ஷல் படேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகை செய்தார்.
ஆர்சிபி வெற்றி
இந்நிலையில் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நேற்றைய போட்டியில் எஸ்ஆர்எச் என தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.
பர்ப்பிள் கேப் -ஹர்ஷல் படேல்
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா, 2 போட்டிகளில் இதுவரை விளையாடி 137 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை நோக்கி சென்றுள்ளார். இதேபோல ஆர்சிபியின் பௌலர் ஹர்ஷல் படேல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தமாக 7 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப்பை நோக்கி தனது அடியை வைத்துள்ளார்.