3 முறை கோப்பை வெற்றி
ஐபிஎல்லில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 3 முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் கடந்த ஐபிஎல் 2020 தொடரில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ப்ளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் 7வது இடத்தில் நிலைபெற்று தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.
காரணமாக கூறப்பட்ட மூத்த வீரர்கள்
அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணமாக அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்கள் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆயினும் அணியின் இளம் வீரர்கள் கைகொடுத்த நிலையில் சில வெற்றிகளையும் கடந்த சீசனில் அந்த அணி பெற்று ஓரளவிற்கு மரியாதையுடன் தொடரைவிட்டு வெளியேறியது.
'பட்டப்பெயரை மாத்துங்க'
தற்போது இந்த சீசனில் சில வீரர்களை அணியிலிருந்து விடுவித்துவிட்டு இளம் வீரர்களை அணியில் சேர்க்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டாடிஸ் ஆர்மி என்ற சிஎஸ்கேவின் பட்டப்பெயரை மாற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தக்க வைக்க அறிவுறுத்தல்
சிஎஸ்கே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாக்கூர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.