ராபின் சிங்
ராபின் சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஆடிய முன்னாள் வீரர். ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக 136 போட்டிகளில் ஆடி உள்ளார். அவர் தற்போது சென்னையில் இருக்கிறார். லாக்டவுன் நேரத்தில் காய்கறி வாங்கப் போய் காவல்துறையிடம் சிக்கி இருக்கிறார்.
சென்னையில் லாக்டவுன்
சென்னையில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர தடை உள்ளது. அத்துமீறி பயணம் செய்தால் காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
காய்கறி வாங்க பயணம்
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் அடையாறில் இருந்து உத்தண்டி வரை காரில் பயணம் செய்துள்ளார். அவர் காய்கறி வாங்க இத்தனை தூரம் சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் சோதனையில் அவரிடம் அது குறித்து விசாரித்துள்ளனர்.
பறிமுதல்
விசாரித்ததில் ராபின் சிங்கிடம் ஈ-பாஸ் இல்லை. மேலும், எந்த அவசரமான காரணங்களுக்காகவும் அவர் வரவில்லை. காய்கறி வாங்க தன் வீட்டில் இருந்து நீண்ட தூரம் வந்துள்ளார் என்பதை அறிந்தனர். அவர் தன் வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டரை தாண்டி வந்ததால் அவரது காரை பறிமுதல் செய்தது காவல்துறை.
இரண்டு கிலோ மீட்டர்
ராபின் சிங் எந்த எதிர்ப்பும் கூறாமல் காரை அவர்களிடம் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அமலில் உள்ள கடுமையான லாக்டவுன் விதிப்படி அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னையில் மக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி வரக் கூடாது. மேலும், வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் லாக்டவுன் ஏன்?
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. 18,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகாமல் உள்ளனர். சென்னை மாநகரின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது.
வெளியேற முடியாத நிலை
சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதை தவிர்க்க சென்னையில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை விட்டு யாரும் வெளியேற முடியாத நிலை உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றாலும்..
சென்னைக்கு உள்ளேயும் மக்கள் வெளியே நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அடையாளம் இருந்தாலும், ராபின் சிங் காரை பறிமுதல் செய்து கடமையை செய்துள்ளது காவல்துறை.