மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் கோலாகல துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை அணி கோப்பையை ஒப்படைத்தது. மீண்டும் கோப்பையை வெல்வோம் என அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாகலமாக நடந்த துவக்க விழாவைத் தொடர்ந்து, இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.
கடந்த முறை சாம்பியன் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துவக்க விழாவில் கோப்பையை ஒப்படைத்தார். அப்போது பேசிய அவர் "இங்கு குவிந்துள்ள ரசிகர்களின் ஆதரவுடன் மூன்று முறை கோப்பையை வென்றோம். இந்த முறையும் கோப்பையை வெல்ல முயற்சிப்போம்" என்றார்.