117 நாட்களுக்கு பிறகு போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 117 நாட்களாக முடங்கியுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நேற்று முதல் துவங்கியுள்ளது. சௌதாம்ப்டனின் ஏஜியஸ் பௌல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகமான கவனம்
4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐசிசியின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயோ செக்யூர் முறையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு தினந்தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த போட்டி மீது சர்வதேச அளவில் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிகமான கவனம் காணப்படுகிறது.
மீண்டும் விளையாட ஆர்வம்
இந்நிலையில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாட ஆர்வமாக உள்ளதாக இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீண்டும் துவங்கியுள்ளதை பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளதாகவும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு வாழ்த்து
இதேபோல, இங்கிலாந்தில் கிரிக்கெட் மீண்டும் துவங்கியதற்கான நல்ல செய்திகள் வந்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டிய இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, இறுதியாக மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை பார்ப்பதற்கு நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அவர், தானும் விளையாடுவதற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.