ஏதாச்சும் பண்ணு.. அப்படியே இருக்காதே.. ரிஷப் பந்துக்கு அட்வைஸ் கொடுத்த சாஹா
டெல்லி: விக்கெட் கீப்பிங்கில் ஏதாவது புதுஸ்ஸா பண்ணனும் என்று ரிஷப் பந்த்துக்கு கீப்பர் விருத்திமான் சாஹா அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி நிலவுவது வழக்கம். தோனி ஆக்டிவாக இருக்கும்போதே கோலி உருவெடுத்தார். இன்று தோனி இடத்தை தனது பாணியில் அவர் நிரப்பி வருகிறார்.
இந்த நிலையில் ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா இடையே இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க நல்ல போட்டி நிலவுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக அதாவது எதிரிகளாக தங்களைக் கருதிக் கொள்வது இல்லை. மாறாக ஒருவருக்கு ஒருவர் தட்டிக் கொடுத்து வளர்ச்சி காண்கின்றனர்.

பேட்டி கொடுத்த விருத்திமான் சாஹா
விருத்திமான் சாஹா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "ரிஷப் பந்த் வயதில் இளையவர். நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய வயது. நான் அவரிடம் எப்போதுமே நிறைய புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று கூறுவது வழக்கம். விக்கெட் கீப்பராக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது குறித்து அவருக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவேன். நிச்சயம் எங்களுக்குள் போட்டியே கிடையாது. இருவருமே சூப்பராக பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.

வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை
கடந்த நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான பகல் -இரவு போட்டியில் சாஹா இடம்பெற முடியவில்லை. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சாஹா இடம் பெறவில்லை. அப்போட்டியில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தானும் பந்த்தும் ஜாலியாக இருக்கிறோம். ஜோக்கடிக்கிறோம். சேர்ந்து பயிற்சி பெறுகிறோம். நிறையப் பேசுவோம். அவர் நிறைய முயற்சிப்பார் என்று சாஹா கூறியுள்ளார்.

22 வயசு ரிஷப் பந்த்
தற்போது ரிஷப் பந்த்துக்கு 22 வயதுதான் ஆகிறது. அதேசமயம், சாஹாவுக்கு 36 வயதாகப் போகிறது. எனவே பந்த்துக்கு இந்திய அணியில் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இதை சாஹாவும் உணர்ந்துள்ளார். எப்போதுமே வாய்ப்புகளை விட அணியின் நலன்தான் முக்கியம். அதை நானும் உணர்ந்துள்ளேன். எனவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்துவதில்லை என்று கூறுகிறார் சாஹா.

அணியின் நலனே முக்கியம்
நாங்கள் அனைவருமே இந்தியாவுக்காகத்தான் ஆடுகிறோம். அணிதான் எது சிறந்தது என்பதை முடிவு செய்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும். கடந்த தொடரில் ரிஷப் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடினார். இப்படித்தான் இருக்கும். எல்லோருக்குமே விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சாஹா.


Click it and Unblock the Notifications