டெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் துவங்க உள்ள நிலையில், யார் யார் துவக்க ஆட்டக்காரர்களாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது.
எட்பாஸ்டனில் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் இதை அவர் கூறியுள்ளார்.
ஷிகார் தவான் நல்ல ஒருதினப் போட்டி வீரர். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் நடந்த ஆட்டங்களிலும் நன்றாக விளையாடியுள்ளார். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.
அதனால், முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். நான் கேப்டனாக இருந்தால், இதைத் தான் செய்வேன் என்று கங்குலி கூறியுள்ளார்.