கொல்கத்தா: என்னதான் புக்கிகள், தரகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விவிஐபிகளைத் தொடர்ந்து போலீசார் கைது செய்தாலும், கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்கவே முடியவில்லை. நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மட்டும் ரூ 2500 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிரவைத்துள்ளது.
ஏற்கெனவே, இந்த இறுதிப் போட்டியே வட இந்திய லாபிகள் மற்றும் ஊடகங்களைத் தடுக்க மும்பை அணிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டாத விமர்சனங்கள் உள்ள நிலையில், இந்த சூதாட்டம் அதை இன்னும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த சூதாட்டத்தில் பெருமளவில் சென்னை அணி ஜெயிக்கும் என்றே கட்டியிருந்தனர்.
இந்த இறுதிப்போட்டியில் மட்டும் ரூ 2,500 கோடிக்கு பெட்டிங் நடந்திருக்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இந்த சூதாட்டம் நடந்திருக்கிறது. இங்கு இந்த மாதிரி சூதாட்டம் சர்வசாதாரணம். போட்டி நடந்த அன்று சென்னையிலும் சூதாட்டம் நடந்துள்ளது. ஆனால் அது மிக குறுகிய வட்டத்துக்குள் நடத்தப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி தொடங்கியதும் தொலைபேசி லைன்கள் அனைத்தும் திறந்திருந்தன. போட்டி தொடங்கியதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக பந்தயம் தொடங்கியது.
அப்போது, மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், அதன் மீது ஒரு ரூபாய் பந்தயம் கட்டுபவருக்கு ஒரு ரூபாய் 75 காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததும், சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக பந்தயம் கட்டப்பட்டது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால், ஒரு ரூபாய்க்கு, ஒரு ரூபாய் 85 காசு வழங்கப்படும் என்ற அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்ததும், அந்த அணியின் மீதான பரிசு 60 காசாகவும், மூன்றாவது விக்கெட்டை இழந்ததும் பரிசு, 40 காசாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய போது அந்த அணிக்கு 75 காசு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சென்னை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை வென்றால் 75 காசு என்றும், மும்பை வென்றால் பரிசு 36 காசு என்றும் மாற்றப்பட்டது. அப்போது பலரும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சென்னை அணி மீது பணம் கட்டினார்கள். ஆனால் இறுதியில் மும்பை அணி வென்றதால் சென்னை அணி மீது பணம் கட்டிய அனைவரும் தங்கள் பணத்தை பறிகொடுத்தனர்.
இந்த வகையில் மட்டும் ரூ 2500 கோடி புழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக பாட்னாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.