இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு சோதனையை கண்டதில்லை. உலக நாடுகள் மத்தியில் நமது பிட்ச் வெறி பெரும் நகைப்பை உருவாக்கி வருகிறது. எதிராளியை மிக சுலபமாக சந்தித்து சமாளிக்க வேண்டும் என்ற கேப்டன் டோணியின் தீவரம், சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முதலில் மும்பை பிட்ச் குறித்து அவர் சில டிமாண்டுகளை வைத்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்ல. அவர் கேட்டது போலவே பிட்ச் போட்டுக் கொடுத்தும் இந்தியா தோற்றது. இதையடுத்து கொல்கத்தா பிட்ச்சையும அவர் டிக்டேட் செய்தார். ஆனால் அதை கியூரேட்டர் பிரபீர் முகர்ஜி நிராகரித்தார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
தற்போது கொல்கத்தா டெஸ்ட் போட்டியை இந்தியா மிக மோசமான முறையில் இழந்து விட்டது. நமது பந்து வீச்சும் எடுபடவில்லை, பேட்டிங்கும் சரியில்லை. இதனால் 5வது நாள் ஆட்டத்தின் காலையிலேயே போட்டியை முடித்து வெற்றியுடன் கரை சேர்ந்து விட்டது இங்கிலாந்து.
இந்த நிலையில் அடுத்து நாக்பூரில் நடைபெறவுள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் என்ன மாதிரியான பிட்ச்சைக் கேட்கப் போகிறார் டோணி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பையிலும் சரி, கொல்கத்தாவிலும் சரி இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் நிறையச் சாதித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறி விட்டனர். பந்து வீச்சை குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களையே நம்பி வெல்ல வேண்டும் என்று நினைத்தால் எப்படி அது நியாயமாகும் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
கொல்கத்தா பிட்ச்சைப் பொறுத்தவரை இந்தியா முதல் இன்னிங்ஸில் சுதாரிப்பாக ஆடத் தவறி விட்டது. 316 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்ததே இந்தியாவின் இன்றைய தோல்விக்கு முக்கியக் காரணம். அதேபோல 2வது இன்னிங்ஸிலும் இந்தியா மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அஸ்வின் மட்டுமே பொறுப்புடன் தனி நபராகப் போராடினார். அவர் மட்டும் இல்லாவிட்டால் நேற்றே நமது கதை அவமானத்துடன் முடிந்து போயிருக்கும்.
அடுத்து நாக்பூர் டெஸ்ட் வரப் போகிறது. அதில் இந்தியா வென்றேயாக வேண்டும். டிரா செய்தாலோ அல்லது தோற்றோலோ போச்சு, தொடரை இங்கிலாந்து வென்று விட்டுப் போய் விடும். நாம் நாக்பூரில் வெற்றி பெற்றால், குறைந்தது போட்டித் தொடரை டிரா செய்யவாவது முடியும்.
டிசம்பர் 13ம் தேதி நாக்பூரில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டோணி என்ன உத்தியைக் கையாளப் போகிறார், என்ன மாதிரியான பிட்ச் தேவை என்று கேட்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நாக்பூர் கியூரேட்டராவது டோணி சொல்வதைக் கேட்பாரா என்பது அதை விட முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.