அடுத்த டெஸ்ட் கேப்டன்
ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக சீனியர் வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். துணைக்கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவே நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மற்றொரு புறம் கே.எல்.ராகுலின் கையில் அணியை ஒப்படைக்கவும் திட்டம் போட்டு வருகிறது.
எச்சரிக்கும் கவாஸ்கர்
இந்நிலையில் ரோகித்தை கேப்டனாக நியமிக்கவே கூடாது என கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரோகித் சர்மாவின் உடற்தகுதி தான் எனக்கு பெரும் பிரச்சினையாக தெரிகிறது. கேப்டன் என்பவர் அணியின் அனைத்து போட்டிகளிலும் முடிந்தவரை பங்கேற்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு தொந்தரவு உள்ளது. இதனால் அடிக்கடி அவர் விளையாட முடியாமல் போகலாம்.
என்ன காரணம்
ஒரு போட்டியில் வேகமாக ஓடினாலோ, அல்லது வேகமாக ஏதேனும் செயலை மேற்கொண்டாலோ அவருக்கு தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுவிடும். அப்படி நடந்தால் வேறு ஒரு கேப்டனை அடிக்கடி பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எனவே அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் ரோகித் கேப்டனாக செயல்படக்கூடாது என கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
யோசிக்கும் பிசிசிஐ
34 வயதாகும் ரோகித் சர்மா இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் வரை தான் கிரிக்கெட் விளையாடுவார். இதுவே கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்களை கேப்டனாக நியமித்தால் இந்தியாவுக்கு அடுத்த 7 - 8 ஆண்டுகளுக்கு சிறந்த கேப்டன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனை பிசிசிஐ பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.