
டி20 உலக்கோப்பை தொடர்
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் அதற்காக 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் அமீரகத்தில் நல்ல அனுபவம் பெற்ற பாகிஸ்தான் அணியும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
பாகிஸ்தான் பாபர் அசாம் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். சதாப் கான் துணைக்கேப்டனாகவும், அசாம் கான், முகமது ரிஸ்வான் ஆகியோர் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளனர். அனுபவ வீரர்களான சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

அதிர்ச்சி செய்தி
பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் அக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வகார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு மீதம் உள்ள சூழலில் தான் இருவரும் பதவி விலகியுள்ளனர்.
Recommended Video

மிஸ்பா உல் அக் விளக்கம்
இதுகுறித்து பேசிய மிஸ்பா உல் அக், நீண்ட நாட்கள் எனது குடும்பத்தினரை பிரிந்து பயோ பபுளிலேயே இருந்துள்ளேன். எனவே ஓய்வு வேண்டும் என்பதற்காக நான் பதவி விலகுகிறேன் எனக்கூறினார். இதே போல வக்கார் யூனிஸும் விளக்கம் அளித்தார். அதில், மிஸ்பா தனது முடிவு குறித்து என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். நானும் அவரும் ஒன்றாக தான் பணியாற்ற வந்தோம். 2 வருடம் ஒன்றாக செயல்பட்டோம். எனவே பதவி விலகும் போதும் ஒன்றாக விலகிட வேண்டும் என நினைக்கிறேன் எனத்தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சி
மிகப்பெரும் தொடரை எதிரே வைத்துக்கொண்டு பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் பதவி விலகியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரு பெரும் ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாக நியமித்து பாகிஸ்தான் வாரியம் அதிரடி காட்டியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் ரமேஷ் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூவ் ஹேய்டன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னான் பிலாண்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைசிறந்த வீரர்கள்
மேத்யூவ் ஹெய்டன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்பட்டவர். சர்வதேச போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் அடித்தவர் அவர். டி20 திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல்-ல் 32 போட்டிகளில் விளையாடி 1107 ரன்களை விளாசியுள்ளார். இதே போல தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் பிளாண்டர் மிரட்டல் பவுலர் ஆகும். சர்வதேச போட்டிகளில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அசுர பலம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் சாதகம் உள்ளது. அந்த அணிக்கு மற்றொரு ஹோம் மைதானமாக அமீரக மைதானங்களே உள்ளன. இப்படி வலுவாக இருக்கும் சூழலில் 2 ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது இன்னும் பலத்தை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











