சச்சினுக்கு விருது
லாரிஸ் உலக விளையாட்டு விருதுகள் கடந்த 1999 முதல் ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறந்த அணி உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சிறப்பான விளையாட்டு தருணம் என்பதிற்காக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் லாரிஸ் விருதை பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பு
லாரிஸ் உலக விளையாட்டு விருது 2020க்கான விழா ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது. இதில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ், கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்முலா ஒன் வீரர் லெவிஸ் ஹாமில்டன், ஒலிம்பிக் வீராங்கனை சோலி கிம் ஆகியோர் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான லாரிஸ் விருதினை தட்டி சென்றனர்.
20 ஆண்டுகளில் சிறப்பு
கடந்த 2011ல் இந்தியா உலக கோப்பை வென்றபோது, சக வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் சுமந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தருணம் கடந்த 20 ஆண்டுகளில் சிறப்பான விளையாட்டு தருணம் என்ற லாரிசின் பட்டத்தை தற்போது தட்டி சென்றுள்ளது. சர்வதேச அளவில் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர்.
ஸ்டீவ் வா கைகளால் விருது
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வா கைகளால் அந்த விருதினை பெற்றுக் கொண்டார். அழகான மற்றும் பிரம்மாண்டமான மேடையில் இந்த விருதினை டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் அறிவித்தார். இதையடுத்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்த விருதினை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இத்தகைய விருதினை கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டால்தான் பெற முடியும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய சச்சின் டெண்டுல்கர், உலக கோப்பை வெற்றி என்பது நம்பமுடியாத தருணம் என்றும் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறினார். உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் அந்த நேரத்திற்காக தான் 22 ஆண்டுகள் தவமிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். நம்பிக்கை இழக்காமல் தான் காத்திருந்து அந்த கோப்பையை கைபற்றியது மிகுந்த பெருமைமிகுந்த நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மண்டேலாவை நினைவுகூர்ந்த சச்சின்
மேலும் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவையும் சச்சின் டெண்டுல்கர் அந்த மேடையில் நினைவு கூர்ந்தார். மண்டேலா உலக மக்களின் மேம்பாட்டிற்காக ஏராளமான கருத்துக்களை கூறியுள்ள போதிலும், விளையாட்டு என்பது உலக மக்களை ஒருங்கிணைக்கும் கருவி என்று அவர் கூறியதை சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு பேசினார்.