கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் மூத்த வீரர் லசித் மலிங்கா இடம்பெறவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டிதான் அவர் கடைசியாக விளையாடியது.
இலங்கை கிரிக்கெட் அணி, தலா 3 டெஸ்ட்கள், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக ஒருதினப் போட்டி நடக்க உள்ளது.
வரும் 10ம் தேதி தர்மசாலாவிலும், 13ம் தேதி மொகாலி மற்றும் 17ம் தேதி விசாகப்பட்டினத்திலும் போட்டிகள் நடக்க உள்ளன.
இதற்கான இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி டெஸ்ட் போட்டியில் சதமடித்த கேப்டன் தினேஷ் சண்டிமால் அணியில் இடம்பெறவில்லை. இந்த தொடருக்கு புதிய கேப்டனாக திசாரா பெரேரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
யார்க்கர் வீசுவதில் கில்லாடியான மலிங்கா, கிட்டத்தட்ட பவுண்டரி எல்லை வரை சென்று ஓடி வரும்போதே, கிலி ஏற்படும். அவருடைய வித்தியாசமான பவுலிங் ஸ்டைலால் பந்து எப்படி வரும் என்று கணிப்பது சற்று கடினமாகவே இருக்கும்.
34 வயதாகும் மலிங்காவிடம் சமீபகாலமாக பழைய வேகம் இல்லை. வயதான சிங்கத்திடம் நரிகூட புட்பால் விளையாடுமாம் என்ற கதையாக, அவருடைய நிலை மாறியது.
பாகிஸ்தானுக்கு சென்றபோது அவருடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை. தற்போது இந்தியத் தொடருக்கு கண்டு கொள்ளப்படவில்லை. தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த மலிங்கா, இனி தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு இல்லை என்றே பட்சி கூறுகிறது.