நாட்டிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. இந்தத் தொடரை இழப்பதை தடுப்பதுடன் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.
இரண்டு டெஸ்ட்களிலும் பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். இந்திய அணியின் பேட்டிங் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இதில் வென்றால், தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து உள்ளது. அதே நேரத்தில் தோல்வியை தவிர்ப்பதுடன், தொடரை இழப்பதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
பேட்டிங் வரிசையை வலுப்படுத்த, தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் மீண்டும் களமிறக்கப்படலாம். தவானும், ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்.
பந்துவீச்சை பொறுத்தவரை, அஸ்வின் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் வருவதால், உமேஷ் யாதவ் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2 டெஸ்ட்களில் வென்று மிகவும் தெம்புடன் இங்கிலாந்து களமிறங்கும். தொடரை வெல்வதற்கான வாய்ப்பு என்பதால், இங்கிலாந்து முழு வேகத்துடன் களமிறங்கும். இந்த நிலையில், இந்திய அணி இரு மடங்கு வேகத்துடன் களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளது.