ராதா கையை வச்சா.. அது ராங்கா போனதில்லை.. வரிசையில் 4வது இடம்.. வெற்றிகரமான வெறித்தனம்!
டெல்லி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் நம்பிக்கை நட்சத்திரம் ராதா யாதவ். இலங்கையுடனான கடந்த போட்டியில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ராதா.
Recommended Video
இந்திய மகளிர் அணியின் திறம்பட்ட ஆட்டங்களால், தற்போது அவர்களின் ஆட்டங்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு வருகின்றனர். மகளிர் அணியில் பல்வேறு இளம் திறமைகள் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எப்போதுமே மகளிர் அணியின் பந்துவீச்சாளர்கள் திறம்பட்ட பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். பூனம் யாதவ், ராதா யாதவ் போன்றவர்கள் இந்திய அணியின் சிறப்பான எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

ஏராளமான போராட்டங்கள்
மும்பையில் சிறிய அளவிலான வீட்டில் தன்னுடைய இளமைக் காலத்தை கழித்தவர் ராதா யாதவ். கனவுகளுடன் கழிக்க வேண்டிய அந்த காலகட்டத்தில் போராட்டங்களுடன் கழித்தவர். இவருடைய தந்தை காய்கறி வியாபாரி. ராதா சிறப்பாக கிரிக்கெட்டி விளையாடிய போதும் அவருடைய திறமைக்கு சரியான தீனி கிடைக்காமலேயே இருந்தது.

17 வயதில் இந்திய அணியில் இடம்பிடிப்பு
முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்த ராதா யாதவிற்கு சிறப்பான வழிகாட்டியவர் பயிற்சியாளர் பிரபுல் நாயக். ராதாவை ஆதரித்ததுடன் அவர் கடந்த 2018ல் தன்னுடைய 17வது வயதில் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கவும் காரணமாக இருந்தார் பிரபுல். கடந்த ஆண்டில் ஐசிசியின் டி20 அணியிலும் இடம்பெற்றார் ராதா.

3 படுக்கையறை கொண்ட வீடு
மும்பையில் கண்டிவலி பகுதியில் ஒண்டு குடித்தனம் போன்ற இடத்தில் சிறிய வீட்டில் தன்னுடைய இளம் பருவங்களை கழித்த ராதா, தனியொருவன் படத்தில் வருவதுபோல, ஏழையாக பிறந்தது தன்னுடைய தவறல்ல என்றும் ஏழையாக வாழ்வது தான் தன்னுடைய தவறு என்றும் நிரூபித்துள்ளார். அவர் தற்போது ஏழையல்ல. மும்பையில் சிறப்பான இடத்தில் 3 படுக்கையறைகளுடன் அவரது வீடு மிளிர்கிறது.

பி பிரிவில் தேர்ந்தெடுப்பு
இந்த ஆண்டிற்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ராதா யாதவ் பி பிரிவில் 30 லட்சம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய அணியில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே மற்றும் தீப்தியுடன் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார் ராதா யாதவ். கடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாகியுள்ளார் ராதா.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
கடந்த 2018, பிப்ரவரி 18ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முதலாக களமிறங்கினார் ராதா யாதவ். மேலும் கடந்த 2018ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரிலும் முதல்முறையாக பங்கேற்று, 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் புரிந்தார்.
ஆட்ட நாயகி விருது
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2020 தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோதி அரையிறுதிக்கு இந்தியா சென்ற நிலையில், இலங்கையுடன் முறைக்காக நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அதிரடியாக வீழ்த்தினார் ராதா. இதன்மூலம் இவருக்கு ஆட்ட நாயகி விருதும் கிடைத்தது.

4வது இடத்தில் ராதா
ஐசிசியின் சர்வதேச டி20 தரவரிசை பட்டியலிலும் 4வது இடத்தில் உள்ளார் ராதா யாதவ். இவர் குஜராத் அணியிலிருந்து முதல்முறையாக இந்திய மகளிர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இடது கை ஸ்பின்னராக சிறப்பாக செயல்பட்டு வரும் ராதா யாதவ், குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பு
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடிவரும் ராதா யாதவ், இதில் சிறப்பானவராக கருதப்படுகிறார். ஆயினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வரும் ஸ்பின்னர் ராதா யாதவ், ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து கவனத்தை பெற்றுள்ளார்.

நிரூபித்த ராதா யாதவ்
தன்னுடைய சாதனையில் மட்டுமே கவனம் கொண்டு விளையாடினால் ஏழ்மை ஒரு தடையாக அமையாது என்பதில் உறுதியாக இருந்த ராதா. தன்னுடைய 12 வயது முதலே கிரிக்கெட்டில் கால் பதித்து 17 வயதிற்குள் சர்வதேச போட்டிகளில் விளையாடி தான் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை நிலைநாட்டியுள்ளார். இவரது சாதனைப்பயணம் இனிவரும் இளம்திறமைகளுக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications