லண்டன்: விராட் கோலி முதிர்ச்சியற்றவர் என்று தென் ஆப்ரிக்க பவுலர் ரபாடா காட்டமான கருத்தை முன் வைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, உலக கோப்பையில் அந்த அணியின் சார்பாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்து எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. ஆனாலும், ரபாடாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். காயம் காரணமாக நாடும் திரும்பும் வரை, இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தார். அதை சென்னை அணியில் விளையாடிய பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர் முறியடித்தார். இவரும் தென் ஆப்ரிக்க வீரர் என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும், பெங்களூரு அணிக்கும் எதிரான போட்டியில் கோலிக்கும், ரபாடாடவுக்கும் முட்டிக் கொண்டது. அதற்கு பின்னர் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அப்போது என்ன நடந்தது என்று தற்போது மவுனம் கலைத்துள்ளார் ரபாடா. அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய பந்தில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்துவிட்டு என்னை பார்த்து ஏதோ சொன்னார். என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படிக் கோபப்படுவது நன்றாக விளையாடுவதற்கு உதவுவதால் அதுபோலச் செய்கிறார் போல என்று எண்ணினேன்.
ஆனால் அது மிகவும் முதிர்ச்சியற்ற செயல். அவர் அற்புதமான வீரர் தான். இன்னும் அவர் நிறைய பக்குவப்பட வேண்டும். அதேசமயம் அவரால் ஆடுகளத்தில் விமர்சனங்களை தாங்கி கொள்ள முடிவதில்லை. பிறகு அன்று மாலை அணியின் பேருந்தில் செல்லும்போது, நான் என்னையே கேட்டுக் கொண்டேன்.
அவர் ஏன் எப்போதும் ஆடுகளத்தில் கோபமாக இருக்கிறார்? நிஜமாகவே கோபப்படும் நபராக தான் இருப்பாரா என்று. என்னை எது கோபப்படுத்தும் என்றும் எண்ணினேன். அது எப்போதாவதுதான் நடக்கும்.
அப்படி கோபப்படுவதுதான் அவரை நன்கு விளையாட வைக்கிறதா? நான் சொல்வது புரிகிறதா? என்னால் அப்படி என்னைக் கோபப்படுத்தி கொள்ள முடியாது என்று கூறியதாக ரபாடா தெரிவித்துள்ளார்.