300 தாண்டியிருக்காது
இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில், முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் 83 ரன்களும், லோகேஷ் ராகுல் ரன்களும் குவித்தனர். அதன் பிறகு, 9 விக்கெட்டுகள் சேர்ந்து 238 ரன்கள் அடித்தன. அதுவும் லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் 37 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 40 ரன்களும் எடுத்ததால் இந்த ஸ்கோர் கிடைத்தது. இல்லையெனில், இந்திய அணி 300 ரன்களே தாண்டியிருக்காது. இந்த சொதப்பலுக்கு ஒரே காரணம் மிடில் ஆர்டர் தான். மிடில் ஆர்டர் மட்டும் தான்.
ஒன்லி 52 ரன்கள்
புஜாரா, கோலி, ரஹானே இணைந்து அடித்த ஸ்கோர் 52 ரன்கள். இதில் கோலியின் ஸ்கோர் மட்டும் 42, புஜாரா 9 ரன்கள், ரஹானே 1. புஜாராவும், ரஹானேவும் தலைக்கு 30 ரன்கள் அடித்திருந்தால் கூட இந்தியா 400 ரன்களை தாண்டியிருக்கும். இந்திய அணியின் ஓப்பனர்கள், இங்கிலாந்தின் அபார தாக்குதல்களை கடந்து, சமாளித்து, ரன்கள் அடித்து வலிமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், மிடில் ஆர்டர் அதை வீணாக்கியுள்ளது.
கால் நகர்த்தல்
இதுகுறித்து முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், "புஜாராவும், ரஹானேவும் சொதப்புவதற்கு காரணம், தொழில்நுட்ப சிக்கல்கள் (Technical Issues) மற்றும் ரன்கள் எடுக்கும் ஆர்வம் ஆகியவற்றின் கலவையாகும். நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கூட, கிரீஸில் ரஹானே நேரம் இருந்த வரை அவர் அமைதியற்றவராக இருந்த விதத்தை நாம் பார்த்தோம், இறுதியில் அவர் ரன் அவுட் ஆனார். நேற்றும் நாம் அவரது மோசமான கால் நகர்த்தல்களைப் பார்த்தோம்" என்று லக்ஷ்மன் ESPNCricinfo இடம் கூறினார்.
அணுகிய விதம்
மேலும் அவர், "ரஹானே மற்றும் புஜாரா இருவரும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அதாவது லேட் மூவ்மெண்ட் கொடுக்கிறார்கள். இது கடந்த 8-10 மாதங்களில் அவர்கள் அவுட்டாகி செல்வதற்கு இந்த தவறுகள் தான் காரணம். ரஹானே ஆஸ்திரேலிய தொடரின் போதும், இதே பாணியில் தான் வெளியேறினார். இன்று, நீங்கள் ரீப்ளேக்களை மிக உன்னிப்பாக கவனித்தால், அவர் மிக மெதுவாக பந்தை அணுகிய விதத்தை பார்ப்பீர்கள். அதாவது, இருவருமே பந்தை தாமதமாகவே சந்திக்கின்றனர். இதுதான் அவர்கள் அவுட்டாவதற்கு காரணம். ரஹானேவிடம், சுத்தமாக ஃபுட் ஒர்க் இல்லை.
பறிபோகும் இடம்?
அதுமட்டுமின்றி, புஜாரா மற்றும் ரஹானேவின் மனதில் அழுத்தம் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில், மூத்த வீரர்களுக்கு எப்போதும் ஒரு பிரஷர் இருக்கும். அதாவது, வெளியே காத்திருக்கும் இளம் வீரர்கள், தங்களது இடத்தை எப்போது வேண்டுமானாலும் தட்டிப் பறிக்கலாம் என்று. ஒவ்வொருமுறையும் அந்த வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகும் போதும், அந்த பிரஷர் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்று லக்ஷ்மன் கூறியுள்ளார்.