செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்!
டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது.
பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கபில் தேவ்.

சேட்டை செய்ய வேண்டியதுதான்.. ஆனால்!
விராத் கோஹ்லி மைதானத்தில் அதிரடியாக, கோபத்துடன், ஆவேசத்துடன் செயல்படும் அதே நேரத்தில் அதேபோல ஆட்டத்திலும் அவர் அதிரடியாக, அதிரிபுதிரியாக இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.

முத்தம் கொடுக்கட்டும்.. ஆனால்!
விராத் கோஹ்லி சதம் அடித்து விட்டு தனது காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுக்கட்டும். அதில் தவறே இல்லை. அதேசமயம், ஒரு வீரர் ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுப்பாரேயானால் அது கவலைக்குரியதாகும்.

நாங்க விளையாடிய காலம் வேறு... ஆனால்!
நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலம் வேறு. ஆனால் இப்போது உள்ள காலம் வேறு. அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஜென்டில்மேன் ஆட்டம்தான்... ஆனால்!
இது ஜென்டில்மேன்களின் ஆட்டம்தான். ஆனால், அதையே நினைத்துக் கொண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க முடியாது. காலம் மாறி விட்டது. தலைமுறையும் மாறி விட்டது.

டெஸ்ட்டோடு வளர்ந்தோம்.. ஆனால்!
நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டோடு வளர்ந்தோம். ஆனால், இப்போது மைதானத்தில் சண்டை போடுகிறார்கள், அவதூறு பேசுகிறார்கள், கேலி செய்கிறார்கள். டி20 பார்மட்டை இன்று எல்லோருமே ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

நல்லா கட்டிப்புடிங்க... ஆனால்!
போட்டி தொடங்குவதற்கு முன்பு அணி வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி கட்டிப்பிடித்து என்னதான் பேசுவார்கள் என்று தெரியவில்லை. கட்டிப்பிடித்துப் பேசுங்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் டிரஸ்ஸிங் ரூமில் என்ன செய்கிறீர்கள்.. வெறும் முட்டையை மட்டும் சாப்பிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது... ஆனால்!
இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு 25 சதவீத வாய்ப்புகள்தான் உள்ளது. அரை இறுதி வரை போகலாம். அரை இறுதிக்குத் தகுதி பெறும் அனைத்து அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு 25 சதவீதம்தான். அதற்குப் பின் யார் இறுதிப் போட்டிக்குப் போவார்கள் என்பதைக் கணிக்க முடியாது.

தொடக்கம் முக்கியம்... ஆனால்!
தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டம்தான் முக்கியமானது. ஆனால் 15 ஓவர்களில் சிறப்பாக ஆடுவதும் முக்கியமானது. அதில்தான் இந்தியா அந்தப் போட்டியில் என்ன ஆகப் போகிறது என்பதைக் கணிக்க முடியும்.

விக்கெட்டை இழக்கலாம்... ஆனால்!
15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தால் இந்தியா அப்போட்டியில் 270 ரன்களைச் சேர்க்க முடியும். ஆனால் முதல் 15 ஓவர்களில் 2 அல்லது 3 விக்கெட்களை இழந்து விட்டால், நிலைமை கடினமாகி விடும் என்றார் கபில் தேவ்.


Click it and Unblock the Notifications