நம்பிக்கை
கடந்த சில ஆண்டுகளாகவே ரஹானே இந்திய ஒருநாள் அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வந்தார். எனினும், ஐபிஎல் தொடரில் தான் நன்றாக ஆடினால், உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்தார்.
கேப்டன் பதவி
ஆனால், ஐபிஎல் தொடரில் ரஹானே, துவக்கத்தில் சரியாக ரன்கள் குவிக்கவில்லை, தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி பறிக்கப்பட்டபின், சதம் அடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார் ரஹானே.
டெஸ்ட் அணி இடம்
அதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே நிரந்தர இடம் பெற்று இருக்கும் ரஹானே, அதையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து, தற்போது இங்கிலாந்து கவுன்டி அணியான ஹாம்ப்ஷயருடன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
எப்போது ஆடுவார்?
அதன்படி, கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரஹானே ஹாம்ப்ஷயர் அணிக்காக மே, ஜூன் மாதங்களில் ஆட உள்ளார். மேலும், இந்த நகர்வில் இந்திய அணியின் எதிர்கால திட்டம் ஒன்றும் அடங்கி உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன், ஜூலை மாதம் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் துவங்க உள்ளன. அதற்கு, டெஸ்ட் அணியில் மட்டும் ஆடும் இந்திய வீரர்களை தயார் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது பிசிசிஐ.
இதுதான் காரணமா?
உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத டெஸ்ட் அணி வீரர்களை, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்குமாறு பிசிசிஐ வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ரஹானே கவுன்டி போட்டிகளில் பங்கேற்க இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.