மும்பை: உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரருக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தின் ஆதிக்கம் எப்போதுமே குறைவுதான். கர்நாடகாவும், மகாராஷ்டிராவும்தான் அதிக வீரர்களை அளித்து வந்தது. ஆனால் சமீபகாலமாக டெல்லி ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது.
1983ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வெற்றி பெற்றபோது, அந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர், ஸ்ரீகாந்த் இடம் பெற்றிருந்தார்.
2011ல் இந்தியா மீண்டும் உலக கோப்பையை தூக்கியபோது, 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரரான அஸ்வின் இடம் பெற்றிருந்தார். அதற்கு முந்தைய 2007 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். ஆனால் அதற்கும் முந்தைய உலக கோப்பைகளில் தமிழகத்துக்கு ஏமாற்றமே கிடைத்தது.
இம்முறையும் தமிழகத்தின் சார்பில் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். மற்றொரு தமிழக வீரரான முரளி விஜய், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்ட்ர் ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முரளி விஜய்தான் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடைசி வரை நிலைமை இருந்தது, ஆனால் சில சிபாரிசுகள், பின்னிக்கு அந்த வாய்ப்பை பெற்றுத்தந்ததாக கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.