நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி "லந்தை"க் கொடுத்த ஜிம்பாப்வே
ஹராரே: நடந்து முடிந்த உலக கோப்பையில் 2வது இடம் பிடித்த பலம் வாய்ந்த நியூசிலாந்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி எளிதில் வீழ்த்தியுள்ளது.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரேவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 303 ரன்கள் குவித்தது. டெய்லர் ஆட்டமிழக்காமல் 112 ரன்களும், கேன் வில்லியம்சன் 97 ரன்களும் குவித்தனர்.

304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் மசகட்சா, சிபாபா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தது. சிபாபா 42 ரன்னில் அவுட் ஆன நிலையில், மசகட்சாவுடன், எர்வைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியது. இதனால் இருவரும் அரைசதத்தை கடந்தனர்.
மசகட்சா 84 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் சிகும்புரா 26 ரன்னில் அவுட் ஆனார். 4வது விக்கெட்டுக்கு எர்வைனுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்ஸ் மேலும் விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்டார். எர்வைன் அதிரடியாக விளையாடி 99 பந்துகளில் சதத்தை தொட்டார்.
ஜிம்பாப்வே அணிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற பரபரப்பு கட்டம் உருவானது. அந்த ஓவரில் எர்வைன் 18 ரன்கள் கிடைத்தது. கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 49வது ஓவரில் எர்வைன் அதிரடியால் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் ஒரு ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் பந்தை மெக்கல்லம் வைடாக வீச ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 304 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 108 பந்துகளில் 130 ரன்களுடன் எர்வைன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டது. சீனியர் வீரர்கள் இல்லாமலேயே, ரஹானே தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்று அசத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications