சென்னை: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்கியது. நடிகர்கள் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன் ஆகியோர் பங்கேற்றனர். நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் போன்றோர் நடனமாடினர். இதன்பிறகு ஆட்டம் இனிதே தொடங்கியது.
உள்ளூர் அணியான சென்னையின் எஃப்சியும், நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் சந்தித்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியது.
சென்னையின் எஃப்சி அணியைப் பொருத்த வரை, கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைகளை கவனித்து அணியில் சில மாற்றங்களை செய்திருந்தது. பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து சில வலுவான வீரர்களை விளையாட அழைத்து வந்திருந்தது.
கடந்த முறை சிறப்பாக விளையாடிய வீரர்களையும் சென்னை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. மைக்கேல் சில்வெஸ்ட்ரி, எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலியின் நடுக்கள வீரர்கள் மேனுலி பிளாசி, தடுப்பாட்டக்காரர் அலெஸாண்ட்ரோ போடென்ஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் தவிர, பிரேசில் நடுக்கள வீரர் ரஃபேல் அகஸ்டோ, தடுப்பாட்டக்காரர்கள் ஈடர் மாண்ட்டெய்ரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
எத்தியோப்பிய முன்கள வீரர் ஃபிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபௌலா எடிமா ஆகியோர் கொல்த்தா அணியிலிருந்து சென்னை அணிக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
கொல்கத்தா அணியும், இந்த முறை தங்கள் அணியில் முக்கிய மாற்றங்களை செய்திருந்தது. ஃபிக்ரு, லூயிஸ் கார்சியா மற்றும் ஜோஃப்ரி மேட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்துவிட்டது.
கடந்த சீசனில் சிறந்த வீரருக்கான விருது பெற்ற எய்ன் ஹூயூமி (கனடா), இந்த முறை கொல்கத்தா அணியில் இணைந்திருந்தார்.
ஆட்டம், தொடங்கிய 13வது நிமிடத்தில், கொல்கத்தாவின் நட்சத்திர ஆட்டக்காரர், போஸ்டிகா கோல் போட, கொல்கத்தா 1-0 என்ற கணக்கில் ஆதிக்கத்தை ஆரம்பித்தது. ஆனால், ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜிஜே ஒரு கோல் அடிக்க, சென்னை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஆட்டத்தின் இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. சமநிலையுடன் இடைவேளைக்கு பின்பு ஆட்டம் தொடங்கியபோது, கொல்கத்தா வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். 65வது நிமிடத்தில் போஸ்டிகா மீண்டும் ஒரு கோல் போட்டார். 76வது நிமிடத்தில் வல்டோ ஒரு கோல்போட்டார். இதனால் கொல்கத்தா 3-1 என்ற கணக்கில் மளமளவென முன்னிலைக்கு சென்றது.
ஆட்டம் முடிவடையும்தருவாயில் 89வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பயன்படுத்தி சென்னை வீரர் எலனோ ஒரு கோல்போட்டார். அதன்பிறகு கோல் ஏதும் போடப்படவில்லை. எனவே ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்றது. சொந்த மைதானத்தில் சென்னை தோற்றது. இந்த தொடர் மொத்தம் 61 போட்டிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.