போதை மருந்து சர்ச்சை.... உலகக் கோப்பையை மிஸ் செய்கிறார் பெரு கேப்டன்!

டெல்லி: போதை மருந்து எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டுக்கு ஆளான பெரு கால்பந்து அணியின் கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு 14 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பிபா உலகக் கோப்பையில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்குகிறது. இதில் சி பிரிவில் பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பெருவும் இடம்பெற்றுள்ளது.
கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டீனாவுக்கு எதிராக பெரு விளையாடியது. அந்தப் போட்டியின்போது, தடை செய்யப்பட்ட போதை மருந்தை எடுத்துக் கொண்டதாக குரேரோ மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
அவருக்கு வாடா' எனப்படும் உலக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, 14 மாதங்கள் தடை விதித்தது. இந்த நிலையில், பிபா இந்த தடையை 6 மாதங்களாக குறைத்தது.
1982க்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் பெரு அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குரேரோ இருந்தார்.
இந்த நிலையில், வாடா தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிஏஎஸ் எனப்படும் விளையாட்டு மேல்முறையீட்டு கோர்ட், வாடா அளித்த 14 மாத தடையை உறுதி செய்தது. அதனால், இந்த உலகக் கோப்பையில், பெரு அணிக்காக விளையாடும் வாய்ப்பை, 34 வயதாகும் குரேரோ இழந்துள்ளார்.


Click it and Unblock the Notifications