மும்பை: சுனில் சேத்ரியின் ஒரு வீடியோ, போட்டியை பார்க்க வரும்படி ஒரு கோரிக்கை. ஒரே நாளில் 18 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியின்போது, உலக அளவில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பெற்றார். மேலும் கென்யாவுக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டம் சேத்ரிக்கு 100வது போட்டியாகும். இந்திய அளவில் 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது வீரராகிறார்
மும்பையில் நடக்கும் இந்த கால்பந்து தொடரின் போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு சுனில் சேத்ரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். அதில், கால்பந்து போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்துக்கு வர வேண்டும். எங்களுக்காக குரல் கொடுங்கள், எங்களை திட்டுங்கள், ஆனால், மைதானத்துக்கு வாருங்கள். இரு வீரர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்று அந்த வீடியோவில் சேத்ரி உருக்கமாக கூறியுள்ளார்.
அவருடைய இந்த கோரிக்கைக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, டென்னில் வீராங்கனை சானியா மிர்ஸா என பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆன்லைனில் இன்றைய போட்டிக்கான டிக்கெட்களை போட்டி போட்டு வாங்கினர். கடைசியில் ஹவுல் புல்லாகி விட்டது. 18 ஆயிரம் பேர் அமரக் கூடிய மும்பை கால்பந்து ஏரினா மைதானத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன.