ஐஎஸ்எல் அரை இறுதிக்கு நுழையப் போவது யார்?
டெல்லி: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, இந்தாண்டு மிகவும் கடுமையாக உள்ளது. அரை இறுதிக்கு பெங்களூரு எப்சி ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களுக்கு, ஆறு அணிகள் இடையே கடும் போட்டி உள்ளது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், அறிமுக அணியான பெங்களூரு எப்சி அணி மட்டுமே இதுவரை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் அடிப்படையில் பார்த்தால், புள்ளிப் பட்டியலில் அடுத்துள்ள 6 அணிகளுக்கு, அரை இறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்புள்ளது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஏடிகே இந்த முறை சொதப்போ சொதப்பு என்று சொதப்பி, அரை இறுதிக்கான வாய்ப்பு பட்டியலில் கூட இல்லை.
அடுத்து சில லீக் ஆட்டங்கள் மிச்சமுள்ள நிலையில், அரை இறுதிக்கு நுழையக் கூடிய வாய்ப்பு உள்ள அணிகள் குறித்து பார்ப்போம். போட்டி விதிகளின்படி, ஒவ்வொரு அணியும், தலா 18 ஆட்டங்களில் விளையாடுகின்றன. எதிர் அணியுடன் உள்ளூரில் ஒரு ஆட்டம் மற்றும் அதன் சொந்த மண்ணில் ஒரு ஆட்டம் என, போட்டி அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

புனே சிட்டிக்கு ரூட் கிளியர்
அரை இறுதிக்கு நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ள அணிகளில் புனே சிட்டி முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில், 29 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாட உள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் டிரா செய்தாலே, அரை இறுதிக்கு நுழைந்துவிடும். இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொருத்து, அரை இறுதிக்கு நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிக கோல் வித்தியாசம் உள்ளது புனே சிட்டிக்கு மிகப் பெரிய பலமாகும். அடுத்ததாக, எப்சி கோவா மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுடன் புனே சிட்டி விளையாட உள்ளது.

டோணியின் டீமுக்கு வாய்ப்பு உள்ளது
கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் சென்னையின் எப்சி அணிக்கு, அரை இறுதிக்கு நுழைய மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, 28 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாட உள்ள ஆட்டங்களில் மிகவும் வலுவான கேரளா பிளாஸ்ட்ர்ஸ், மும்பை சிட்டி எப்சியை சந்திக்க உள்ளது. இந்த ஆட்டங்களில் வென்றால், அரை இறுதி வாய்ப்பில் சந்தேகமே இல்லை. ஒன்றில் வென்றாலும் அல்லது இரண்டிலும் டிரா செய்தாலும், அல்லது ஒன்றில் டிரா செய்தாலும் மற்ற அணிகளின் ஆட்டங்களைப் பொருத்து, அரை இறுதிக்கு வாய்ப்பு உள்ளது.

தயாராகும் ஜாம்ஷெட்பூர்
தற்போது, 26 புள்ளிகளும், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணி, புனே சிட்டி மற்றும் சென்னையின் எப்சி அணிகளுக்கு கடும் சவாலாக உள்ளது. அதே போல் 24 புள்ளிகளுடன் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கும் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு முக்கிய சவால், கோவா எப்சி அணியிடம் இருந்து வருகிறது. 20 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி, அடுத்து நான்கு ஆட்டடங்களில் விளையாட உள்ளது.

புள்ளிப் பட்டியலில் 7வது இடம்
20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி அணி அடுத்து 3 ஆட்டங்களில் விளையாட உள்ளது. புள்ளிப் பட்டியலில் 4 முதல் 7வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், கோவா எப்சி, மும்பை சிட்டி எப்சி ஆகிய அணிகள் பங்கேற்கும் அடுத்த லீக் ஆட்டங்களின் முடிவிலேயே, அரை இறுதிக்கு நுழையப் போவது யார் என்பது தெரியும்.


Click it and Unblock the Notifications