பெங்களூரு: சார் எங்களுக்கு வெளிநாட்டு சீஸ் வேண்டாம். நமது பாரம்பரியமான பருப்பும், சாதமும் போதும் என்று, ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதுபோல, பயிற்சியாளர்களை அடிக்கடி மாற்றுவது என்பது இந்திய ஹாக்கி நிர்வாகத்துக்கு பழக்கமான விஷயமாகி விட்டது.
இந்திய ஹாக்கி அணியின் கோச்சாக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மகளிர் அணியின் கோச்சாக இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார். அப்போது மகளிர் அணியின் கோச்சாக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் அணி சரியாக செயல்படவில்லை என்று, மரிஜ்னே மீண்டும் மகளிர் அணிக்கு கோச்சாக இந்த மாதம் மாற்றப்பட்டார். மகளிர் அணியின் கோச்சாக இருந்த ஹரேந்திர சிங், ஆடவர் அணியின் கோச்சாகி உள்ளார்.
அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. ஹரேந்திர சிங், ஆடவர் அணிக்கு, 2009 முதல் 2011 வரை ஏற்கனவே பயிற்சியாளராக இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக வந்துள்ளார்.
இது குறித்து ஹாக்கி அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான பி.ஆர். ஸ்ரீஜேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறந்தவர்கள். ஆனால், நமக்கு எது தேவை, எது நமக்கு ஒத்துவரும் என்பதுதான் முக்கியம். மரிஜ்னே சீஸ் சாப்பிடுவார். அதே நேரத்தில் ஹரேந்திரா பருப்பும், சாதமும் சாப்பிடுவார். இதுதான் நமது பாரம்பரியம். நமக்கு பிடித்தது, நமக்கு ஒத்து போகக் கூடியது என்று ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.