ஆன்ட்வெர்ப் : பெல்ஜியம் நாட்டில் பின்ட்ரோ சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 36 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் ஜப்பான் அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதியது. 5-வது இடத்திற்கான இந்த ஆட்டத்தில் இந்திய கோல்கீப்பர் சவீதா அபாரமான திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு, ஆட்டத்தின் இறுதி வரை ஜப்பான் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் சவீதா அபாரமாக தடுத்தார். இறுதி கால் மணி நேரத்தில் மட்டும் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் ஒரு கோலை கூட ஜப்பான் அணியால் போட முடியவில்லை.
ஆட்ட நேர இறுதி வரை எந்த கோலும் அடிக்காத நிலையில், இந்திய அணி ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு 2-வது முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது.
1980-க்கு பிறகு, அதாவது, 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.