சென்னை: ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புரோ கபடி 'லீக்' போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடந்தது. வீரர்களின் ஜெர்சியும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், கமல் ஹாசன், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், " கபடி நம் மண்ணின் விளையாட்டு. அதை எங்கும் பரவிட செய்ய வேண்டும். கபடியை தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக ஒத்துக்கொண்டேன். இந்திய விளையாட்டுகள் அனைத்தும் அமைதி காலத்தில் போரை மறக்காமல் இருக்கவே ஆரம்பிக்கப்பட்டது. ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது" என்று கூறினார்.