சென்னை/டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலகாவிட்டால் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய மாட்டோம் என்று மிரட்டல் விடுத்திருக்கும் சஹாரா மீதுதான் எத்தனை பஞ்சாயத்துகள்...
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம் வெடித்தது முதல் சில வட இந்திய ஊடகங்களும் சஹாரா குழுமம் போன்றவைகளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகின்றன. அதுவும் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீனிவாசனை எப்படியும் பதவியில் தூக்கி விடுவது என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சீனிவாசன் தான் ராஜினாமா செய்யப் போவது இல்லை... மூவர் கமிஷன் விசாரணை நடத்தும் என்று அறிவித்த பின்னரும்கூட இந்த கோஷத்தை விட்டுவிடுவதாக இல்லை. இதில் மிகப் பெரிய காமெடியே சீனிவாசன் ராஜினாமா செய்யாவிட்டால் இந்திய அணிக்கான ஸ்பான்சரை விலக்கிக் கொள்வேன் என்று சஹாரா நிறுவனம் அறிவித்திருப்பதுதான்!
சீனிவாசனை நோக்கி கை நீட்டும் சஹாரா மீதுதான் எத்தனை புகார்கள்.. 35 ஆண்டுகளுகு முன்பு சுப்ரதோ ராயால் தொடங்கப்பட்ட சஹாரா குழுமம் மின்சரம், மீடியா உள்ளிட்ட பல துறைகளில் கால் பதித்திருக்கிறது. இந்தியாவின் கிரிக்கெட், ஹாக்கி, பார்முலா ஒன் கார் பந்தயம் ஆகியவற்றுக்கு ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு தமது சாம்ராஜ்யத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது.
சமீபத்தில் அந்த நிறுவனம் செய்த முறைகேட்டையடுத்து ரூ. 24 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே செம போடு போட்டது. ஆனாலும் அசரவில்லையே சஹாரா கோஷ்டி... உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அதன் வங்கிக் கணக்குகளை முடக்கவும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் பங்கு பரிவர்த்தனை அமைப்பான செபி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கொஞ்சம் பல்டி அடித்தது சஹாரா. பின்னர் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதோ ராயிடம் கடந்த ஏப்ரல் மாதம் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி குடைச்சல் விசாரணையும் நடத்தியது.
அதுமட்டுமல்ல ஐபிஎல் புனே வாரியர்ஸ் அணிக்கு உரிமைதாரர் சஹாரா குழுமம்தான்.. பிக்ஸிங் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது சஹாராவுக்கு சொந்தமான புனே வாரியர்ஸ் அணி திடீரென ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் பிக்ஸிங் விவகாரம் பெரிதானால் புனே வாரியர்ஸின் தில்லாலங்கடிதன்ம் அமுங்கிப் போய்விட்டது.
புனே வாரியர்ஸ் அணியை 10 ஆண்டுகளுக்கு சஹாரா நிறுவனம் ரூ. 1,702 கோடிக்கு வாங்கியது. ஆனால் முதலில் 94 ஐபிஎல் போட்டிகள் என்று முன்னர் கூறப்பட்டது. இது 74ஆகக் குறைக்கபட்டது. இதனால் ஆண்டு கட்டணத்தை குறைக்கக் கோரியது சஹாரா. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்க மறுத்தது. இந்த பஞ்சாயத்தில் சஹாரா செலுத்த வேண்டியதில் 20% கட்டணத்தை மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு செலுத்தியது. மீதி தொகையை செலுத்தவில்லை. இதனால் அது கொடுத்திருந்த வங்கி கேரண்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துக் கொண்டது.
இதனால்தான் கடுப்பாகிப் போன புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இந்த சஹாராதான் சீனிவாசனை பதவி விலகச் சொல்லுது! அய்யோ.. அய்யோ..
இதேபோல் சில வட இந்திய ஊடகங்களும்... சீனிவாசன் பதவி விலகவே முடியாது என்று அடித்துச் சொல்லி 2 நாட்களாகிவிட்டது. ஆனால் அவரை எப்படியாவது வெளியேற்றிவிட முடியாதா எனத் துடிக்கின்றன... நாட்டில் நடப்பதை பதிவு செய்வதை விட்டுவிட்டு தாங்கள் நினைப்பதே நாட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பது என்ன ஊடக தர்மமோ?