கொச்சி: இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டித்தொடரில் மேற்கிந்திய தீவுகளின் இரு நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் இடம் பெறப்போவதில்லை. அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், மற்றும் சிக்கன பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஆகிய இருவருமே வெவ்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியில், தசை பிடிப்பு காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் இடம்பெறவில்லை. இந்நிலையில், சுழல் பந்து வீச்சாளர் சுனில் நரைனும் அணியில் இடம்பெறப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ் கெயில் அதிரடியில் பாத்தி கட்டுபவர் என்றால், சுனில் நரைன் சிக்கனமாக பந்து வீசி எதிரணி வீரர்களை திக்குமுக்காட செய்வதில் வல்லவர்.
இவ்விருவருமே ஓய்ந்து போயுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள். ஆனால் அப்படிப்பட்ட இரு வீரர்களும் அணியில் இல்லாதது வெஸ்ட் இண்டீசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நடப்பு உலக சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது எந்த ஒரு பெரிய அணியாக இருந்தாலும் சிம்ம சொப்பனத்தை தரக்கூடியது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் போன்ற குட்டி அணி தனது பலமான இரு வீரர்களை இழந்துள்ள நிலையில், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித்தொடரின்போது, நரைன் பந்து வீச்சை ஆய்வு செய்த நடுவர்கள் அவர் பந்தை எறிவதைப் போல உள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் சர்வதேச போட்டிகளில் பந்து வீச நரைனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. எனவே இன்று சாம்பியன்ஸ் லீக் டி20 பைனலில் சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா சார்பில் நரைன் களமிறங்கப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.