
மும்பை: ஐபிஎல் சீசன் 11 தொடக்க ஆட்டத்தில், 166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே, ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்தது. கடைசி ஓவர்களில் பிராவோ அதிரடியாக சிக்சர் மழை பொழிந்து, அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். காயமடைந்திருந்த போதும் கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் 10 ரன்கள் குவிக்க, சிஎஸ்கே திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 புள்ளிகளை சிஎஸ்கே பெற்றது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோணி, பீல்டிங் தேர்ந்தெடுத்தார். ஆரம்பம் முதலே சென்னை பவுலர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து 5 சீசன்களில் துவக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்திருந்தது. அதற்கேற்றார்போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 7 ஆக இருந்தபோது, எவின் லூயிஸ் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 3.5 ஓவர்களில் 20 ஆக இருந்தது.. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷண் ஜோடி சற்று நிலைத்து நின்றது. அணியின் ஸ்கோர் 12.3 ஓவர்களில் 98ஆக இருந்தபோது 3வது விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் இழந்தது. 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிஷணும் ஆட்டமிழந்தார். 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு, 113 ரன்களுடன் மும்பை இந்தியன்ஸ் திணறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டயா, குருணால் பாண்டயா சகோதரர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ். ஹார்திக் பாண்டயா 20 ரன்களும், குருணால் பாண்டயா 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் 2 விக்கெட்களையும், இம்ரான் தாகிர், தீபக் சாகர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் துவக்கம் முதலே சிஎஸ்கே ரன் குவிக்க முடியாமல்
சொதப்பியது. ஷேன் வாட்சன் 16 ரன்கள், அம்பட்டி ராயுடு 22 ரன்கள், சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், கேப்டன் டோணி 5 ரன்கள், ஜடேஜா 12 ரன்கள், தீபக் சாகர் ரன் ஏதும் எடுக்கவில்லை, ஹர்பஜன் சிங் 8 ரன்கள், மார்க் வுட் 1 ரன் என அனைவரும் சொதப்பினர்.

பிராவோ தட்டுத் தடுமாறி ரன்களை சேர்த்து வந்தார். கடைசியில் 18 மற்றும் 19வது ஓவர்களில் தலா 20 ரன்கள் குவித்து, சிஎஸ்கேவுக்கு வெற்றி வாய்ப்பை அவர் உறுதி செய்தார். பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.
அதன்பிறகு 14 ரன்கள் எடுத்திருந்தபோது, காயம் காரணமாக வெளியே சென்ற கேதர் ஜாதவ் கடைசி ஓவரில் விளையாட வந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் ஜாதவ் சிக்சர் அடித்தார். 5வது பந்தில் பவுண்டரி அடிக்க, சிஎஸ்கே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேதார் ஜாதவ் 24 ரன்கள் எடுத்தார்.

இந்த திரில் வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணி வரும் 10ம் தேதி சென்னையில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12ம் தேதி ஐதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை சந்திக்கிறது.
நாளை டெல்லியில் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும், கோல்கத்தாவில் இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.