சென்னை அணி
இந்தாண்டு பேட்டிங் மற்றும் பவுலிங் என யாரும் எதிர்பார்க்காத ஃபார்மில் சிஎஸ்கே உள்ளது. ஓப்பனிங்கில் முதல் சில போட்டிகளில் சொதப்பி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் தோனி தொடர்ந்து வாய்ப்பளித்தன் மூலம் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் டூப்ளசிஸ் அதிரடி காட்டுகிறார். அதே போல் 3வது வீரராக மொயின் அலியை பயன்படுத்தியது பெரும் நன்மையை கொடுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சுரேஷ் ரெய்னாவின் கம்பேக் அணிக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜா, தீபக் சஹார் என மிகச்சிறப்பாக உள்ளது.
ரசிகர்கள் வருத்தம்
அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கேப்டன் தோனி மட்டும் இன்னும் திணறி வருவது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. இந்தாண்டு 7 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவர் ஆட்டத்தின் கடைசியில் இறங்கினாலும், அதிரடி காட்டிவிட்டு செல்வார். ஆனால் இந்தாண்டு அவரின் பேட்டிங்கில் பெரியளவில் அதிரடி தெரியவில்லை.
மரண அடி உள்ளது
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தீபக் சஹார், ஒரு பேட்ஸ்மேனால் தொடர்ந்து 15 - 20 வருடங்களாக ஒரே மாதிரியான ஆட்டத்தை கொடுக்க முடியாது. ஐபிஎல் போன்ற தொடருக்கு முன்னதாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பவர்களுக்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட சற்று நேரம் எடுக்கும். அதுவும் தோனி போன்ற மேட்ச் ஃபினிஷர் பணியை செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. 2018 - 2019ம் ஆண்டுகளில் கூட தோனி மெதுவாக தான் தனது ஆட்டத்தை தொடங்கினார், பின்னர் வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினார். எனவே அதைபோல இந்தாண்டின் ஐபிஎல் 2வது பாதியில் தோனியின் மரண அடியை பார்ப்போம்.
கேப்டன்சி சிறப்பு
சென்னை அணியில் இது எனக்கு 4வது வருடமாகும். எனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனி என் மீது வைத்துள்ள நம்பிக்கை மிக முக்கிய காரணம். அதிகளவிலான போட்டிகளில் சிஎஸ்கேவுக்கு பவர் ப்ளேவில் 3 ஓவர்கள் வீசும் வாய்ப்பை தோனி எனக்கு கொடுத்தார். ஒரு வீரரை எப்படி ஒரு சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது என்பது தோனி கேப்டன்சியில் சிறப்பான விஷயம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.