டெல்லி: 8 வருடங்களாக ஆடிய சென்னை சூப்பர் கிங்சை விட்டு புதிய அணிக்கு விளையாட செல்வது மனபாரம் அளிப்பதாக கூறியுள்ளார் டோணி.
மேட்ச் பிக்சிங் புகாரால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருட கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட புனே அணிக்காக ஏலத்தில் டோணி வாங்கப்பட்டுள்ளார்.
இந்த அணியின் சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடந்தது. அப்போது நிருபர்களிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக டோணி பேசினார்.
நான் எட்டு வருடங்களாக சென்னை அணிக்காக விளையாடியுள்ளேன். மற்றொரு அணிக்காக விளையாடுவது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது. புதிய அணிக்காக விளையாட ஆர்வமாக இருப்பதாக நிருபர்கள் எழுதிவிடுகிறீர்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. சென்னை அணியின் ரசிகர்கள் என்மீது வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் பொருட்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை. இதுதான் மனித இயல்பு என உணர்கிறேன்.
அதே நேரம் ஒரு தொழில்முறை வீரராக, என்னை தங்கள் அணியில் சேர்த்துக்கொண்ட புனே நிர்வாகத்திற்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன். ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக, 8 வருடங்கள் சென்னை அணிக்காக என்னுடன் ஆடிய சுரேஷ் ரெய்னா, மெக்கல்லம், ஜடேஜா போன்றோரை பிரிவது கஷ்டமாக உள்ளது. நாங்கள் அனைவருமே அனைத்து வருட சீசனிலும், சீராக ஆடக்கூடியவர்கள். சென்னையின் பலமே நாங்கள் ஒரு டீமாக செயல்பட்டதுதான்.
புனே அணிக்கு, டுப்ளசிஸ், அஸ்வின் போன்றோர் சிஎஸ்கேயிலிருந்து வந்துள்ளனர். சிஎஸ்கே பயிற்சியாளரான பிளம்மிங் இங்கும் பயிற்சியாளராக கிடைத்துள்ளதுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். இவ்வாறு டோணி உணர்ச்சி மிகுந்தவராக பேட்டியளித்தார்.