புலம்பல்
டெஸ்ட் தொடரை இழக்க முக்கிய காரணம், தங்கள் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பதால் தான் என்பதை நேரடியாக ஒப்புக் கொள்ளாத கேப்டன் பாப் டுபிளெசிஸ், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் பயன்படுத்திய திட்டத்தை பற்றி கூறி புலம்பி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணி நிலை
தென்னாப்பிரிக்க அணி 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் படு மோசமாக ஆடி அதிர்ச்சி அளித்தது. அதனால், பயிற்சியாளர் குழுவை மொத்தமாக நீக்கியது கிரிக்கெட் போர்டு. ஸ்டெய்ன், ஆம்லா உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
டெஸ்ட் தொடரில் தோல்வி
இந்த நிலையில், இந்தியாவுக்கு வந்தது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரில் 1 - 1 என சமன் செய்த அந்த அணி, டெஸ்ட் தொடரில் 3 - 0 என்ற அளவில் இந்திய அணியிடம் படு தோல்வி அடைந்தது.
டாஸ் தோல்வி
இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் டாஸில் தோல்வி அடைந்தார். மூன்றாவது டெஸ்டில் தனக்கு டாஸ் ராசி இல்லை எனக் கூறி, வேறு ஒரு வீரரை டாஸ் போட வைத்து, அதிலும் தோற்று பல்பு வாங்கினார்.
கோலியின் திட்டம்
டாஸ் ஒருபுறம் இருந்தாலும், கேப்டன் கோலி இந்த தொடரில் தெளிவான திட்டங்கள் மூலம் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தினார் என்பதே உண்மை. கோலி மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
விக்கெட் இழந்தனர்
பின்னர், இந்தியா இரண்டாவது நாளின் கடைசியில் பெரிய ஸ்கோர் அடித்து டிக்ளர் செய்யும். இரண்டாம் நாளின் இறுதியில் பேட்டிங் ஆட வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள் சோர்ந்து போய் இருப்பதால், விரைவாக விக்கெட் இழந்தனர். இந்த திட்டத்தை பற்றி கூறித் தான் கதறி இருக்கிறார் டுபிளெசிஸ்.
சோர்ந்து போனோம்
டுபிளெசிஸ் கூறுகையில், கடைசி டெஸ்டில் நாங்கள் ஆடிய விதமே வெளிப்படையாக என்ன நடந்தது என கூறும். நாங்கள் தொடரை சிறப்பாக துவக்கினோம். ஆனால், தொடர் முழுவதும் எங்கள் மீது இருந்த நீண்ட கால அழுத்தம் காரணமாக. நாங்கள் மோசமாக ஆடத் துவங்கினோம் என்றார்.
டாஸ் தான் காரணம்
மேலும், இந்திய துணை கண்டத்தில் டாஸ் தான் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறினார் டுபிளெசிஸ். மேலும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் டாஸ் இல்லாமல் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
இருட்டில் ஆட சொல்லி..
மேலும் டுபிளெசிஸ் கூறுகையில், இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. 500 ரன்கள் குவித்தார்கள். இருட்டும் போது டிக்ளர் செய்தார்கள். இருட்டாக இருக்கும் போது 3 விக்கெட்கள் எடுத்தார்கள். அப்போது மூன்றாம் நாள் காலையில் அழுத்தத்துடன் துவங்குவீர்கள் என்றார்.
ஒரே மாதிரி நடந்தது
ஒவ்வொரு போட்டியிளும்ம் இது காப்பி - பேஸ்ட் போல நடந்தது எனக் கூறி தோல்விக்கான காரணமாக கோலியின் திட்டத்தை சுட்டிக் காட்டினார் டுபிளெசிஸ். உண்மையில், தென்னாப்பிரிக்க அணியின் பின்வரிசை வீரர்கள் மற்ற முக்கிய பேட்ஸ்மேன்களை விட அதிக பந்துகள சந்தித்தனர். அதைப் பற்றி கூறாமல், எதிரணியை காரணம் காட்டி தப்பிக்க முயன்றுள்ளார் டுபிளெசிஸ்.