Recommended Video
சச்சின், சேவாக் சாதனை
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியுமா? ஆம், முடியும் என முதன் முதலில் அதை செய்து காட்டினார் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன சச்சின் டெண்டுல்கர். அடுத்து அதே சாதனையை வீரேந்தர் சேவாக் செய்தார். அவர் 2011இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன்கள் குவித்தார்.
அடுத்ததாக ரோஹித் சர்மா
அடுத்து மூன்றவதாக துவக்க வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடி 158 பந்துகளில் 209 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் அப்போது ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த மூன்று வீரர்களுமே இந்திய பேட்ஸ்மேன்கள் தான் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
5 ஓவரில் அதிரடி
அந்தப் போட்டியில் மிக நிதானமாக பேட்டிங் செய்து வந்தார் ரோஹித் சர்மா. 114 பந்துகளில் சதம் கடந்தார். எனினும் அடுத்த 42 பந்துகளில் இரட்டை சதத்தை கடந்தார் ரோஹித். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவர் 20 பந்துகளை சந்தித்து 67 ரன்கள் குவித்தார்.
16 சிக்ஸர்கள் அடித்தார்
அதில் டோஹர்ட்டி வீசிய ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவித்து மிரள வைத்தார். அந்தப் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோஹித் சர்மா.
எதிர்பார்க்கவில்லை
அவர் இரட்டை சதம் அடிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம், அவர் 138 பந்துகளில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அப்போது 5 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தன. ஆனாலும், தன் அதிரடி சிக்ஸர்களால் இரட்டை சதம் அடித்தார்.
யுவராஜ் சிங் என்ன சொன்னார்?
கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய போது யுவராஜ் சிங் உள்ளிட்ட சிலர் இன்னும் ஒரு 10-15 ரன்கள் அடித்திருந்தால் சேவாக் சாதனையை முறியடித்து இருக்கலாமே என கூறி உள்ளனர்.
வியந்து போன ரோஹித்
சேவாக் 219 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், அப்போது ரோஹித் சர்மா 209 ரன்கள் மட்டுமே எடுத்தார். தன் மீது இருந்த எதிர்பார்ப்பை கண்டு வியந்துள்ளார் ரோஹித் சர்மா. இது பற்றி சமீபத்தில் தான் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.
இரட்டை சதத்தில் சாதனை
அப்போது விட்டாலும், அடுத்த ஆண்டே இலங்கை அணிக்கு எதிராக 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார் ரோஹித் சர்மா. அந்தப் போட்டியில் 9 சிக்ஸ் மட்டுமே அடித்த அவர் 33 ஃபோர் அடித்து இருந்தார்.
மூன்றாவது இரட்டை சதம்
அது மட்டுமின்றி 2017இல் மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா. ஒருநாள் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதம் அடித்த வீரர் ரோஹித் மட்டுமே. மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளார் ரோஹித்.