கோலி அடித்த சதம்
111 பந்துகளில் சதம் கடந்த கோலி 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித், தவான் துவக்கத்தில் கைவிட்ட நிலையில், கோலி போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு அசத்தினார். ஒருநாள் போட்டியில் தன் 42வது சதத்தை அடித்து தன் ரசிகர்களுக்கு பரிசு கொடுத்தார். பரிசு எனக் கூற ஒரு காரணமும் உள்ளது.
ஐந்து மாத இடைவேளை
சுமார் ஐந்து மாதத்திற்குப் பின் கோலி சதம் அடித்துள்ளார். முந்தைய ஆண்டுகளில் கோலி சதம் அடிக்காத தொடரே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், கோலி உலகக்கோப்பை தொடரில் ஐந்து அரைசதங்கள் அடித்தார். ஆனால், ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
பெரிய கொண்டாட்டம்
அந்தக் குறையைப் போக்கி சதம் அடித்த கோலி, அதை பெரிய அளவில் கொண்டாடினார். ஓடி வந்து காற்றில் குத்து விட்ட கோலி தன் ஜெர்சியை சுட்டிக் காட்டினார். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
புவனேஸ்வர் என்ன சொன்னார்?
போட்டிக்குப் பின் பேசிய புவனேஸ்வர் குமார், "விராட்டின் பாவனைகளை பார்த்தாலே, அவர் எந்த அளவுக்கு இந்த சதத்தை எதிர்பார்த்தார் என்பது புரியும். அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்பது போல அல்ல இது. உலகக்கோப்பையில் 70, 80 ரன்களில் தொடர்ந்து ஆட்டமிழந்தார்" என்றார்
ஆடுகளம் சரியாக இல்லை
மேலும், "அப்போது ஆடிய ஆடுகளங்கள் எளிதாக இல்லை. ஒவ்வொரு முறை ஆட்டமிழந்து வரும் போதும் ஆடுகளம் எளிதாக இல்லை என்றே குறிப்பிடுவார்" என்று கூறினார் புவனேஸ்வர் குமார். அரைசதங்களை சதமாக மாற்ற முடியாத சோகத்தில் இருந்துள்ளார் கோலி.
|
காலியான சாதனைகள்
தற்போது சதம் அடித்து மகிழ்ந்த அவர் பல்வேறு சாதனைகளை நொறுக்கித் தள்ளினார். இந்திய அளவில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கங்குலியை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார்.
மியான்தத் சாதனை காலி
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்களில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத்தை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே 2000 ரன்களை எடுத்தார் கோலி.
புவனேஸ்வர் அசத்தல்
புவனேஸ்வர் குமாரும் அசத்தலாக பந்து வீசி இருந்தார். அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முக்கியமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து கொஞ்சம் தெம்பாக ஆடி வந்த போது ஒரே ஓவரில் இரு விக்கெட்களை சாய்த்து, போட்டியை மாற்றினார்.