அபார துவக்கம்
தன் முதல் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் நவ்தீப் சைனி. வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் விளங்கினார்.
ஆட்டநாயகன் விருது
அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தன் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்றார். ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறினார்.
என்ன செய்தார்?
ஆனால், முதல் போட்டியில் முதல் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் கொஞ்சம் ஓவராக ஒரு காரியத்தை செய்தார். நிக்கோலஸ் பூரன் முன்னதாக சிக்ஸ் அடித்து இருந்தார். அடுத்த 2வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதை கொண்டாடும் வகையில் பூரன் வெளியே சென்ற போது சைகை காட்டினார்.
ஐசிசி நடவடிக்கை
அது ஐசிசி விதிகளை மீறும் செயலாகும். அதனால், போட்டி முடிந்த உடன் ஐசிசி ரெப்ரீ ஜெப் குரோவே விசாரணை செய்தார். நவ்தீப் சைனி தன் தவறை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கினார்.
முதல் விக்கெட்
தன் முதல் சர்வதேசப் போட்டியில் தன் முதல் விக்கெட்டுக்கு தண்டனை பெற்றுள்ளார் சைனி. ஆட்டநாயகன் விருது வென்றாலும், இளம் வீரர் என்பதால் எந்த துடுக்குத்தனத்தையும் களத்தில் காண்பிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் பெற்றுள்ளார் சைனி.
கவனம் தேவை
ஒரு டீமெரிட் புள்ளியால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இதே போல நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் ஒரு தடைப் புள்ளி கிடைக்கும். இரண்டு தடைப் புள்ளிகள் பெறும் பட்சத்தில் ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகள் அல்லது இரு டி20 போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.