லீக் சுற்று தோல்வி
2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா சுமாராகவே ஆடத் துவங்கியது. லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது இந்திய அணி. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நியூசிலாந்து தொடரிலும் இந்தியா படுதோல்வி அடைந்து இருந்தது.
கடும் கோபம்
அதனால், லீக் சுற்று தோல்வியை கண்ட ரசிகர்கள் கடும் கோபம் கொண்டார். இந்தியாவில் பல பகுதிகளில் கங்குலி, சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் அந்த செயல் தவறு என அடுத்த சில நாட்களில் நிரூபிக்கத் துவங்கியது இந்திய அணி.
வெற்றிகள்
அதன் பின், லீக் சுற்று மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது.
தவறான டாஸ் முடிவு
அந்தப் போட்டியில் மழை வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், கேப்டன் கங்குலி டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது தான் இந்திய அணி செய்த மாபெரும் தவறு. அத்துடன் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிப் பாதை முடிவுக்கு வந்தது.
ஹர்பஜன் எடுத்த விக்கெட்கள்
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. பின் ஹர்பஜன் சிங் தன் சுழலால் கில்கிறிஸ்ட் மற்றும் ஹெய்டன் விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
ரிக்கி பாண்டிங் அபாரம்
ரிக்கி பாண்டிங், டேமியன் மார்ட்டின் இணைந்து 234 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிக்கி பாண்டிங் அன்று ஆடிய ஆட்டத்தை தன் வாழ்நாளில் மறக்க மாட்டார். அப்படி ஒரு அபாரமான பேட்டிங் அது. 74 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அதன் பின் மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தார்.
அதிர்ச்சி அளித்த பந்துவீச்சாளர்கள்
ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை எட்டுமா என ஒரு கட்டத்தில் எதிர்பார்த்து வந்த நிலையில், 50 ஓவர்களில் 359 ரன்களை எட்டியது. இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர்களில் 87 ரன்களும், ஜாகிர் கான் 7 ஓவர்களில் 67 ரன்களும் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
இமாலய இலக்கு
ஆஸ்திரேலிய அணியை, குறிப்பாக ரிக்கி பாண்டிங்கை கட்டுப்படுத்த வழி இல்லாமல் கேப்டன் கங்குலி அந்தப் போட்டியில் எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தார். இந்தியா அணி 360 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது.
சச்சின் ஏமாற்றம்
இந்திய ரசிகர்கள் அனைவரும் சச்சினைத் தான் மலை போல நம்பி இருந்தனர். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சச்சின் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போதே ரசிகர்கள் உடைத்து போனார்கள். பலர் டிவியை ஆஃப் செய்து விட்டனர்.
இந்தியா தோல்வி
அதன் பின் இந்திய அணியில் சேவாக் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தும், டிராவிட் 47 ரன்கள் எடுத்ததும் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. இந்திய அணி 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது.