நிலையான அணி
மும்பை இந்தியன்ஸ் அணி தான் இந்த ஐபிஎல் தொடரில் நிலையான அணியுடன் ஆடி வருகிறது. மற்ற அணிகள் தங்களின் களமிறங்கும் அணியை போட்டிக்கு, போட்டி பல்வேறு காரணங்களால் மாற்றி வரும் நிலையில், வெற்றியோ, தோல்வியோ அதே அணி தான் என மும்பை உறுதியாக உள்ளது.
பேட்டிங் ஆர்டர்
ரோஹித் சர்மா துவக்க வீரராகவும், மிடில் ஆர்டர் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இரண்டு நம்பகமான உள்ளூர் வீரர்களும் உள்ளனர். கடைசி 5 முதல் 10 ஓவர்களில் அடித்து ஆட பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா உள்ளனர்.
அச்சுறுத்தும் பேட்டிங் வரிசை
இப்படி ஒரு அபாரமான, அச்சுறுத்தும் பேட்டிங் வரிசை வேறு எந்த அணியிலும் இல்லை. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் தேவையே இல்லாமல் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது.
ரன் குவிப்பு தடைபட்டது
பேட்டிங் ஆர்டர் மாற்றத்தால் பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆனாலும், மத்திய ஓவர்களில் மும்பை அணியின் ரன் குவிப்பு தடைபட்டது. அப்போது ரசிகர்கள் கேப்டன் ரோஹித் சர்மா செய்த பேட்டிங் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
என்ன நடந்தது?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டி காக் 23, ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து வந்தார்.
க்ருனால் பாண்டியா
அப்போது ஐந்தாம் வரிசையில் பொல்லார்டுக்கு பதில் க்ருனால் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார். ஹர்திக் பாண்டியா வந்திருந்தால் கூட அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், க்ருனால் பாண்டியாவுக்கு ஏன் திடீர் பேட்டிங் வாய்ப்பு? என்ற கேள்வி எழுந்தது.
என்ன காரணம்?
கடந்த போட்டியில் க்ருனால் பாண்டியா கடைசி ஓவரின் கடைசி நான்கு பந்தில் அதிரடியாக இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து 20 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்த நிலையில் அவருக்கு திடீர் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
சொதப்பிய க்ருனால்
ஆனால், கடந்த போட்டி போல இல்லாமல் க்ருனால் பாண்டியா பேட்டிங் செய்யவே திணறினார். 17 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் களமிறங்கும் வரை ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ரன் எடுத்து வந்த மும்பை 9 ரன்களுக்கும் கீழ் சரிந்தது.
பொல்லார்டு வரவில்லை
மேலும் போட்டியில் 200 ரன்களை கடக்க முடியவில்லை. க்ருனால் பாண்டியா ஆட்டமிழந்த பின்னும் பொல்லார்டு வரவில்லை. ஹர்திக் பாண்டியா தான் பேட்டிங் செய்ய வந்தார். அவர் 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
மும்பை ஸ்கோர்
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்தது. ஒருவேளை பொல்லார்டு ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்திருந்தால் மும்பை அணி 200 ரன்களை கடந்திருக்க முடியும். கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.