ஐபிஎல் கோப்பை
2020 ஐபிஎல் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வென்றது. அதுவும் இது ஐந்தாவது ஐபிஎல் கோப்பை ஆகும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
பெங்களூர் நிலை
மறுபுறம் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தாங்கள் ஆடிய கடைசி ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதை அடுத்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் எழுந்தது.
கம்பீர் விமர்சனம்
முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மோசமாக விராட் கோலியை குறி வைத்து மட்டம் தட்டி பேசி இருந்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே ஒரே அளவு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்கள். அதில் ஒருவர் 5 கோப்பைகள் வென்று கொடுத்துள்ளார், மற்றொருவர் ஒன்றுமே வெல்லவில்லை என கூறி இருந்தார்.
பெரிய அவமானம்
மேலும், இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கவில்லை என்றால் அது பெரிய அவமானம் என கோலியை சந்தடி சாக்கில் விமர்சனம் செய்தார். அவரது விமர்சனம் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
கோலி என்ன செய்வார்?
ஆகாஷ் சோப்ரா கோலிக்கு ஆதரவாக பேசி உள்ளார். பெங்களூர் அணி மோசமாக இருந்ததற்கு விராட் கோலி என்ன செய்வார்? என கேள்வி எழுப்பினார் அவர். கவுதம் கம்பீர், ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் மட்டுமே அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்கிறார் எனக் கூறினார்.
எத்தனை வென்று இருப்பார்?
அதே சமயம், ரோஹித் சர்மாவுக்கு, கோலி தலைமை தாங்கிய அதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொடுத்து இருந்தால் மும்பை அணி வென்ற ஐந்து கோப்பைகளில் எத்தனையை வென்று இருப்பார்? இரண்டு, மூன்று அல்லது நான்கு? என கேள்வி எழுப்பி உள்ளார் ஆகாஷ் சோப்ரா.
கோலியின் தவறு இல்லை
ரோஹித் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா? கோலியின் அணி சரியாக ஆடவில்லை என்றால் அது கோலியின் தவறு என அர்த்தம் இல்லை என்றார் ஆகாஷ் சோப்ரா.