சரிவில் யுவராஜ்
யுவராஜ் சிங் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். பெரிய அளவில் அவர் ரன் குவிக்காத நிலையில், அவரை கழட்டி விட்டது பஞ்சாப் அணி. கடந்த முறை 2 கோடி அடிப்படை விலைக்கு வந்த யுவராஜ், இந்த முறை 1 கோடி மட்டுமே அடிப்படை விலையாக பெற்றார்.
சென்னைக்கு ஆர்வம் இல்லை
யுவராஜை சென்னை அல்லது மும்பை அணி வாங்கலாம் என கூறப்பட்டது. அந்த அணிகளின் ரசிகர்களும் அதையே விரும்பினார்கள். சென்னை அணி அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை. சென்னை அணியிடம் குறைந்த அளவு பணமே இருந்தது. இரண்டு வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க அந்த அணி திட்டமிட்டு இருந்தது.
அம்பானி திட்டம்
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி யுவராஜ் சிங் மற்றும் தங்கள் அணியில் இருந்து சென்ற மலிங்கா இருவரையும் வாங்க திட்டம் தீட்டினார். இந்த இரு வீரர்களுமே முன்பு போல ஆடுவதில்லை. வயது அதிகமாகி விட்டதும் ஒரு காரணம்.
மலிங்காவை வாங்கினார்
இவர்களை எடுக்க போட்டி இருக்காது என்பதை தெரிந்து கொண்ட ஆகாஷ் அம்பானி மலிங்காவை வாங்க முதல் சுற்றில் மற்ற அணிகள் யாரும் போட்டி போடவில்லை என தெரிந்து கொண்டு அடிப்படை விலை 2 கோடிக்கு அலேக்காக தூக்கினார்.
கடைசி நொடியில் யுவராஜ்
யுவராஜ் சிங்கை முதல் சுற்றில் வாங்க எந்த அணியும் போட்டி போடவில்லை. கடைசி சுற்றில் மீண்டும் யுவராஜ் சிங் பெயர் வந்தது. அப்போதும் மற்ற அணிகள் ஏதும் அவரை வாங்க போட்டியிடுகிறதா என நோட்டம் இட்ட மும்பை இந்தியன்ஸ் குழுவினர், கடைசி நொடியில் அவரை அடிப்படை விலை 1 கோடிக்கு வாங்கினர்.
ஆகாஷ் அம்பானி என்ன சொன்னார்?
ஆகாஷ் அம்பானி கூறுகையில், "யுவி மற்றும் மலிங்கா இந்த ஏலத்தில் எங்களுக்கு முக்கிய வீரர்களாக இருந்தார்கள். எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவ வீரர்கள் இல்லை. அதை மனதில் வைத்து தான் இந்த முறை அனுபவ வீரர்களை வாங்க வேண்டும் என நினைத்தோம். கடந்த 12 முறை ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக லாபம் அளித்தது இது தான் (யுவராஜை அடிப்படை விலைக்கு வாங்கியது)" என்றார்.