ஐபிஎல் பாணி
ஆஸ்திரேலியாலில் பிக் பேஷ் லீக், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரெட் , பாகிஸ்தானில் பி. எஸ்.எல், வங்கதேசத்தில் பி.பி.எல் , வெஸ்ட் இண்டீசில் சி.பி.எல் போன்ற தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஐபிஎல் போல் பெரும் லாபத்தை தரவில்லை என்றாலும் பிற்காலத்தில் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கை கொடுக்கும் அளவுக்கு வருமானம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஐபிஎல் அணிகளுக்கு அழைப்பு
இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்த இரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது டி20 தொடரை பிரபலப்படுத்த புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தங்கள் நாட்டு அணியை ஏலத்தில் வாங்க ஐபிஎல் அணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிஎஸ்கேவின் 2வது அணி
இதன் மூலம் இந்திய ரசிகர்களை கவர முடியும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் புதிய டி20 லீக் தொடரில் விளையாட உள்ள ஆறு அணிகளையும், ஐபிஎல் அணிகளே வாங்கியுள்ளது. அதன்படி கேப் டவுன் நகரத்தை மையமாக வைத்து விளையாட உள்ள அணியை மும்பை இந்தியன்ஸ் வாங்க உள்ளது. இதேபோன்று ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்க உள்ளது.
மும்பை அணியும் வாங்குகிறது
பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல் அணி வாங்குகிறது. டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர்கள் வாங்க உள்ளனர். போர்ட் எலிசபெத் அணியை சன்ரைசஸ் ஹைதராபாத் உரிமையாளர்கள் வாங்குகின்றனர். பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்க உள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 லீக் அணிகளை மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகள் வாங்கி உள்ளன.
எப்படி சாத்தியம்
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ட்ரிம் பாங்கோ அணியை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐபிஎல் அணிகள் தங்களது வியாபாரத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுப்படுத்தி லாபத்தை ஈட்ட முடியும் மேலும் ஒரே பயிற்சியாளர் குழுவை வைத்து கூட மற்ற அணிகளுக்கும் பயிற்சி வழங்கி விளையாட வைக்க முடியும்.