ஐபிஎல்-ல் கொரோனா
கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கு முதலில் உறுதியான கொரோனா தொற்று பின்னர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர்கள் லட்சுமிபதி பாலாஜி, மைக் ஹசி ஆகியோருக்கும் பரவியது. இதன் பின்னர் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, ஐதராபாத் அணி வீரர் விருதிமான் சாஹாவுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
ஐதராபாத் அணி
இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது ஐதராபாத் அணிக்கு ஒருவகையில் நல்ல விஷயமாக இருக்கிறது. ஏனெனில் இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் ஒரே ஒரு போட்டியில் செயல்பட்ட நிலையில் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். எனினும் ஐபிஎல் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.
வில்லியம்சன் பார்வை
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் திடீரென நிலைமை மிகவும் மோசமடைந்தது. அதனை பார்க்க மனவேதனையாக இருந்தது. நாங்கள் தொடரின் பாதி வரை அணி பபுளில் பாதுகாப்பாக இருந்தோம். எல்லாம் சரியாக தான் சென்றுக்கொண்டிருந்தது. திடீரென பபுள்கள் உடைந்து எல்லாம் தலைகீழானது. தொடரை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவு மிகச்சரியான ஒன்று.
பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ எங்களை நாட்டிற்கு அனுப்புவதற்காக சிறப்பான திட்டங்களை வகுத்தது. அனைத்து முடிவுகளும் திடீர் திடீரென எடுக்கப்பட்டன. நாங்கள் அனைவரும் உடனடியாக மாலத்தீவு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டோம். ஆனால் எங்களின் பாதுகாப்புகாக வீட்டிற்கு அனுப்ப பல்வேறு நபர்கள் உழைத்தனர் என வில்லியம்சன் கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து அணி கேப்டனான கேன் வில்லியம்சன் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறார். இதனை முடித்த கையுடன் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகி வருகிறார். இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.