தென்னாப்பிரிக்க அணிக்கு மெசேஜ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 2012ஆம் ஆண்டு கெவின் பீட்டர்சன் காரணமாக ஒரு சர்ச்சை வெடித்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், எதிரணிக்கு கெவின் பீட்டர்சன் சில மெசேஜ்களை போனில் அனுப்பியதாக புகார் எழுந்தது.
தென்னாப்பிரிக்க தொடர்பு
அந்த சர்ச்சை இங்கிலாந்து கிரிக்கெட்டை உலுக்கியது. கெவின் பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். ஆனால், அங்கே தேசிய அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காமல், இங்கிலாந்து வந்து, பின் இங்கிலாந்து தேசிய அணியில் இடம் பெற்றவர்.
வதந்தி
அதனால், அவர் தன் சொந்த நாட்டு அணிக்கு உதவி செய்கிறார் என்பது போன்ற பார்வையில் இந்த சர்ச்சை வெடித்தது. அது மட்டுமின்றி, அப்போதைய இங்கிலாந்து அணி கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்-ஐ எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு கூறியதாகவும் ஒரு வதந்தி பரவியது.
ஐபிஎல் தான் காரணமா?
அப்போது அவர் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டு பின் மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, பின் 2014 ஜனவரி வரை அணியில் இடம் பெற்றார். மீண்டும் ஒரு கருத்து வேறுபாட்டால் அவர் ஓய்வு பெற்றார். ஆனால், 2012 சம்பவத்துக்கே ஐபிஎல் தான் ஒரு வகையில் காரணம் என வெளிவராத தகவலை கூறி உள்ளார் மைக்கேல் வாஹன்.
ஐபிஎல் ஏலம்
2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசன். அப்போது இரண்டு இங்கிலாந்து வீரர்கள் பெரிய தொகைக்கு (7.55 கோடி) ஏலம் போனார்கள். ஒருவர் ஆண்ட்ரூ பிளின்டாப். அடுத்தது கெவின் பீட்டர்சன். அப்போது கெவின் பீட்டர்சன் அதிக தொகைக்கு ஏலம் போனதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார் வாஹன்.
நிறைய பொறாமை
"அப்போது அணியில் நிறைய பொறாமை இருந்தது. ஆனால், வீரர்கள் இப்போது அதை முற்றிலும் மறுப்பார்கள். ஆனால், அந்த சமயம், கெவின் பெரிய ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருந்த போது அப்படி இருந்தது என நினைக்கிறேன்" என்றார் மைக்கேல் வாஹன்.
கோஷ்டி வதந்திகள்
"அப்போது அணியில் பல கிசுகிசுக்கள், கோஷ்டி இருப்பதாக வதந்திகள் இருந்தது. அப்போது சிலர் மட்டும் கொண்ட ஒரு கோஷ்டி இருந்தது. கிரேம் ஸ்வான், டிம் ப்ரெஸ்னன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு மற்றும் மாட் பிரியர். அப்போது இருந்த கிசுகிசுப்படி அவர்கள் ஒரு பக்கமும், கெவின் பீட்டர்சன் தனியாக மறுபக்கமும் இருந்தார்" என்றார் வாஹன்.
ஐபிஎல்-இல் ஆடுவோம்
"கெவின் பீட்டர்சன் ஐபிஎல்-லுக்கு செல்ல வேண்டும் என கூறினார். அப்படித் தான் எல்லாம் ஆரம்பித்தது. அப்போது தான் இந்த கோஷ்டி வேலை செய்தது. கெவின், ஐபிஎல்-இல் ஆடுவதன் மூலம் ஒருநாள் அணியை வளர்க்கலாம் என்றார். ஆனால், அவர்கள் கெவின் பணத்துக்காக செல்வதாக எண்ணினர்." என்றார் வாஹன். இங்கிலாந்து அணி ஐபிஎல் சீசனில் போட்டிகளில் ஆடாமல், ஐபிஎல் தொடரில் ஆடலாம். அதன் மூலம் அனுபவம் கிடைக்கும் என பீட்டர்சன் கூறினார். அதுதான் சர்ச்சைகளுக்கு தொடக்கம் என்கிறார் வாஹன்.
அணிக்கு எதிராக கெவின்
மேலும், "கெவின் அப்போது பெரிய ஒப்பந்தத்தில் இருந்தார். ஆனால், மற்றவர்கள் அதில் ஒரு சின்ன அளவு கூட பெறவில்லை. அதனால், கெவின் அணிக்கு எதிராக நிற்பதாகவே அப்போது கருதப்பட்டது" என்றார் வாஹன். அந்த பிரச்சனை 2012 ஐபிஎல் சீசனுக்கு முன்பு நடந்தது.
மூல காரணம் இதுதான்
அதன் பின் தான் தென்னாப்பிரிக்க தொடரில் கெவின் பீட்டர்சன், தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு தன் அணி பற்றிய தகவல்களை மெசேஜ் அனுப்பியதாக சர்ச்சை வெடித்தது. இந்த சர்ச்சைக்கு மூல காரணமே அந்த கோஷ்டி மோதல் மற்றும் ஐபிஎல் ஏலத் தொகை காரணமகாக இருக்கலாம் என்கிறார் மைக்கேல் வாஹன்.