ஐ.பி.எல்.லில் எப்போதும் ராஜா
ஐ.பி.எல்.லில் எப்போதும் ராஜாவாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடந்த 2020 சீசன்தான் மறக்க முடியாத சறுக்கலை கொடுத்தது. 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் அமர்ந்து பரிதாபமாக காட்சியளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் உடைந்து போனார்கள். ராஜாவாக வலம் வந்த சி.எஸ்.கே.வின் கதை இனி அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள்.
முன்னாள் வீரர்கள்
இந்த பரிதாப முகத்துடன் நடப்பு சீசனில் விளையாட ஆரம்பித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சி.எஸ்.கேவை வறுத்தெடுத்தனர். ''சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது'' என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், '' சி.எஸ்.கே கடந்த சீசனில் தோல்வி முகத்தை ஆரம்பித்து விட்டது. இந்த முறை சி.எஸ்.கே 5-வது இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று கூறினார்.
சஞ்சய் மஞ்சரேக்கர்
இது தவிர வாயை கொடுத்து எப்போதும் வம்பில் மாட்டிக் கொள்ளும் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், '' சி.எஸ்,கே முதல் சுற்றிலேயே வெளியேறி விடும். டாப் 4-க்குள் சத்தியமாக வராது'' என்று அதிகப்படியான வார்த்தைகளை விட்டார். ஆனால் இந்த வாய்ச்சவாடலுக்கு எல்லாம் மறக்க முடியாத பதிலடி கொடுத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு காலடி எடுத்து வைத்து விட்டது.
C என்றால் comeback
அதுவும் இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 9 வெற்றியுடன், 2 தோல்வி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் கெத்தாக அமைந்துள்ளது சி.எஸ்.கே. இந்த தொடருக்கு முன்னதாக சி.எஸ்.கே.வை கிண்டல் செய்த ஆகாஷ் சோப்ரா, கவுதம் காம்பீர் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோருக்கு தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். CSK- C என்றால் comeback என்று சி.எஸ்.கே ரசிகர்கள், விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர். விமர்சர்களை மீம்ஸ்களால் வாட்டி வதைத்து வருகின்றனர்.
இது முதன்முறை அல்ல
சி.எஸ்.கே இப்படி செமையாக கம்பேக் கொடுப்பது இது முதன்முறை அல்ல. இடையில் 2 வருடங்கள் சி.எஸ்.கே விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு சி.எஸ்.கே அவ்வளவுதான் என்று பேசினார்கள். இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு மீண்டும் ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்ற சி.எஸ்.கே அந்த வருடம் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியதுடன், விமர்சர்களுக்கு பதிலடி கொடுத்தது. சி.எஸ்.கே இப்படி மீண்டும், மீண்டும் எழுந்து வருவதற்கு காரணம் வெறித்தனமான ரசிகர்களின் ஆதரவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.