ராஜஸ்தான்: ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா இல்லை இக்கட்டான நேரத்தில் அவர்களின் அணிக்குத் திரும்புவிடுவார்களா என்று கணிக்க முடியாமல், அணிகள் இன்று நேற்றல்ல பதினொரு ஆண்டுகளாகத் திணறி வருகின்றன.
ஏப்ரல் மதம் இரண்டாம் வாரம் ஆரம்பித்து மே மாதம் இறுதி வரை பொதுவாக நடக்கும் ஐபிஎல் அட்டவணையோடு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர்வதேச போட்டிகள் மட்டுமே எப்போதும் குறுக்கிடும். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சில வீரர்கள், தங்களுடைய நாட்டு அணியில் இருந்து விடுவித்துக் கொண்டு தனிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். பிராவோ, பொல்லார்ட், கெய்ல், ரஸ்ஸல் போன்றவர்கள் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் டி 20 தொடர்களில் வருடம் முழுவதும் விளையாடி வருகிறார்கள்.
ஆனால், சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வேளையில் எப்போது வேண்டுமானாலும் தங்களது சொந்த அணிக்கு திரும்பி விடுவார்கள். சென்ற ஆண்டு, ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக சிறந்து விளங்கிய பென் ஸ்டோக்ஸ் இறுதி போட்டிக்கு முன்னர் வெளியேற, ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணி, மும்பையிடம் தோல்வி அடைந்தது. ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பியா அணிகள் உள்ளது என்றால், நிச்சயமாக இல்லைதான். ஆனால் கிரிக்கெட்டை பொருத்தமட்டில் ஒருவர் சரமாரியாக ஆடி வருகிறார் என்றால் அவரின் இடத்தை இன்னொருவர் அதே திறனைக் கொண்டு நிரப்பிவிட முடியாது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பக்கபலமாக விளங்கிய ஜோஸ் பட்லரை இங்கிலாந்து நிர்வாகம் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்ததால் நேற்றைய ஆட்டத்தோடு பட்லர் விடைபெற்றார். இது நிச்சயம் ராஜஸ்தான் அணிக்கு பலத்த அடி தான். அணிகளைத் தேர்வு செய்யும்போதே, தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தொடர் முழுவதும் விளையாடுவாரா என்று கொஞ்சம் சிந்தித்தாலே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
ஐசிசியிடம் ஐபிஎல் ஆரம்பித்த காலத்திலிருந்து ஏழு வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டிக்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுத்துவிட்டால் மற்ற நாடுகளும் கேட்குமென்பதால் ஐசிசி மறுத்து வருகிறது.
எப்படியோ.. நல்லத் தரமான வீரர்கள் இறுதி வரை விளையாடுமாறு அணிகள் தேர்ந்தெடுத்தால் போட்டிகள் இன்னமும் சூடுபிடிக்கும்.