சிறந்த பவுலர்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில் குறைவான எகனாமி விட்டுக்கொடுத்த பவுலர்களில் ரஷித் கானும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட ரஷித் கானின் பந்துவீச்சில் சற்று திணற தான் செய்கிறார்கள். இந்நிலையில் இவர் தனது ஐபிஎல் குறித்து பேசியுள்ளார்.
தோனி கேப்டன்சி
சமூக வலைதளத்தில் பேசிய அவர், எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அவருக்கு கீழ் விளையாடுவது, அதில் இருந்து கிடைக்கும் அனுபவமும், எனது கிரிக்கெட் வாழ்வுக்கு மிக முக்கியம். ஒரு பந்துவீச்சாளருக்கு, விக்கெட் கீப்பர் என்பவர் மிகவும் தேவை. அப்படி பார்க்கும் போது, தோனியை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை.
தோனியின் அட்வைஸ்
ஒவ்வொரு முறையும் போட்டி முடிந்தவுடன் நான் அவரிடம் அறிவுரை பெறுவேன். கடந்த முறை அவர், நீ ஃபீல்டிங் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் நீ, மிகவும் சிரமப்பட்டு கீழே விழுந்து பந்தை தடுக்கிறாய். ஒரே ஒரு ரஷித் கான் தான் உள்ளார். மக்கள் அவரது ஆட்டத்தை காண காத்துள்ளனர். உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்வது. நான் ஜடேஜாவுக்கும் இதே அறிவுரையை தான் கூறியுள்ளேன் எனத்தெரிவித்தார்.
ஐபிஎல் 2021
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். இந்த சீசனில் ரஷித் கானிடம் இதுவரை பெரிய அளவில் விக்கெட்கள் வரவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 விக்கெட்களை எடுத்துள்ளார். தொடரின் 2வது பாதி அமீரகத்தில் நடைபெறுவதால், அங்கு அவரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.