ஐந்து நாடுகள்
இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என ஐந்து நாடுகளை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பலர் இணைந்து சாலை பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றனர். இந்த தொடர் மும்பையில் நடைபெற்று வந்தது.
பெரும் வரவேற்பு
இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்று இருந்தனர். அதனால், இந்திய ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. போட்டிகளைக் காண ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
இந்தியா வெற்றி
இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் ஆடி இருந்தது. அந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. மற்ற அணிகளும் தங்கள் லீக் போட்டிகளை ஆடத் துவங்கின.
கொரோனா வைரஸ்
அந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவத் துவங்கியது. அதையடுத்து மத்திய அரசு விளையாட்டுப் போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துமாறு கூறி இருந்தது.
மாற்றி அமைப்பு
அதனால், இந்த தொடரும் ஆள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். மேலும், புனேவில் நடக்க இருந்த போட்டி மும்பையில் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது.
தொலைக்காட்சியில் பார்க்கலாம்
அதனால், இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றே பலரும் கருதினர். தொலைக்காட்சியில் மட்டும் ரசிகர்கள் தங்கள் ஆதர்ச கிரிக்கெட் ஹீரோக்களான சச்சின். சேவாக், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் ஆகியோரை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டிய நிலை இருந்தது.
தொடர் தள்ளி வைப்பு
ஆனால், அதற்கும் வழி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆம், திடீரென இந்த டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஜாம்பவான் வீரர்கள் சிலர், தொடரை நடத்தும் ஏற்பாட்டாளர்களை சந்தித்தது தான் என கூறப்படுகிறது.
ஜாம்பவான் வீரர்கள் சந்திப்பு
ஜாம்பவான் வீரர்கள் சிலர் தொடர் ஏற்பாட்டாளர்களை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. அதன் முடிவில் இந்த டி20 தொடரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. வீரர்கள் தான் இந்த தொடரை தள்ளி வைக்க கோரி இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஐபிக்கள் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக சாதாரண மக்கள் மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி, சில ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்கள் என பல விஐபிக்களும் கூட பாதிப்படைந்து வருகின்றனர்.
இப்படியும் இருக்கலாம்
அதை மனதில் வைத்து ஜாம்பவான் வீரர்கள் இந்த டி20 தொடரை தள்ளி வைக்க கோரி இருக்கலாம். அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட ரசிகர்கள் நேரில் வராவிட்டால் ஏற்படும் நஷ்டத்தை மனதில் வைத்து தொடரை தள்ளி வைத்திருக்கலாம்.