மும்பை : கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ள ரோகித் ஷர்மா, தற்போது உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உலக அளவில் 6,000 பேர்களின் உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரசை உலக மக்கள் திறமையாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய இவர், காயம் காரணமாக மற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா ஓய்வு எடுத்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கேப்டனாக விளையாடவுள்ள ரோகித் சர்மா, தற்போது கொரோனா வைரஸ் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் 6,000 பேர்களின் உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரசை உலக நலவாழ்வு மையம் தொற்றாக அறிவித்துள்ளது. இந்த தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 110 பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் உலக மக்களை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக ரோகித் சர்மா தன்னுடைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் கொரோனா அச்சுறுத்தலை மட்டுமே நினைத்துக் கொண்டுள்ளதாக கூறிய அவர்,
இதை காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்த்தால்
மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவை திறமையுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ரோகித் சர்மா, கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏனென்றால் நமது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் நாம் மால்கள் மற்றும் திரையரங்குகளுக்கும் செல்வதை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணிகளை மெச்சியுள்ள ரோகித் சர்மா, கொரோனாவால் உயிரிழந்துள்ள மக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளார்.