
இங்கிலாந்து பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் (60), ஜேசன் ராய் (40) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்க மற்றவர்கள் ஏமாற்றினர். இதனால் 45.5 ஓவர்களில் அந்த அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், யுவேந்திர சாஹல் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இந்திய அணி வெற்றி
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் சரிந்தது. ரோகித் (17), தவான் (1), கோலி (17) சூர்யகுமார் (16) என அடுத்தடுத்து வெளியேறினர். இந்த சூழலில் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் (125*) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (71) ஆகியோர் அணியை தூக்கி நிறுத்தினர். இதனால் இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 261 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ரோகித் விளக்கம்
இங்கிலாந்து தொடர் குறித்து பேசிய ரோகித் சர்மா, இங்கிலாந்துக்கு கடந்த முறை வந்தபோது தோல்வியுடன் திரும்பினோம். எனவே இங்கு வந்து வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல. எனினும் சாதிக்க நினைத்தோம், தற்போது சாதித்துவிட்டோம். டாப் ஆர்டர் சரிந்துவிட்டால், மீண்டும் அணியை கட்டமைப்பது சாதாரணம் அல்ல. அதனை ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட் அருமையாக செய்தனர்.

டாப் ஆர்டரின் சொதப்பல்
உண்மையை கூற வேண்டும் என்றால் பிட்ச் நன்றாக தான் இருந்தது. டாப் ஆர்டரில் சரியான ஷாட்களை நாங்கள் ஆடவில்லை என்பதே சொதப்பலுக்கு காரணம். எனினும் அதுகுறித்து கவலையில்லை. அவர்களின் தரம் என்னவென்பது பற்றி எனக்கு தெரியும். எனவே சிறந்த வீரர்கள் அனைவருக்குமே தொடர்ச்சியான வாய்ப்பு கொடுத்து, பலமான அணியாக உருவாக்குவோம்.

இரு வீரர்களின் கம்பேக்
தொடர்ந்து பேசிய ரோகித், உலகக்கோப்பைக்கு பிறகு சாஹல் கொடுத்துள்ள கம்பேக் ஆச்சரியம் தருகிறது. அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் நிறைய அனுபவத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இதே போல ஹர்திக் பாண்ட்யாவும் வியப்பை தந்துள்ளார். அவரின் பேட்டிங்கில் எந்தவொரு அழுத்தத்தையும் பார்க்கவே முடியவில்லை என ரோகித் பெருமையுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











